ஈழப்போரின்போது செய்த துரோகத்தை மறைக்கவே செம்மொழி, டெசோ மாநாடுகள்: பழ. நெடுமாறன் தாக்கு
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,
திமுக தலைவர் கருணாநிதி வெளியிட்ட அறிக்கையில் எனக்குப் பதில் சொல்வதாக நினைத்துக் கொண்டு மீண்டும் மீண்டும் பொய்யானதும் முன்னுக்குபின் முரணானதுமான விவரங்களையே தந்துள்ளார்.
இலங்கையில் போர் நடந்தபோது அங்கு உடனடியாகப் போர் நிறுத்தம் கொண்டு வர மத்திய அரசில் அங்கம் வகிக்கும் முக்கியத் தலைவரான கருணாநிதி அதில் அடியோடு தவறிவிட்டார் என்பது என்னுடைய குற்றச்சாட்டாகும்.
நேற்று முன்தினம் நாடாளுமன்றத்திற்கு முன் திமுகவைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் தமிழக மீனவர்கள் தொடர்ந்து சுட்டுக் கொல்லப்படுவதைக் கண்டிக்கும் வகையில் ஆர்ப்பாட்டம் நடத்தப்போவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், அந்த ஆர்ப்பாட்டம் திடீர் என்று கைவிடப்பட்டதற்கு பின்னணி என்ன?
ஈழப்போர் நெருக்கடியான கட்டத்தை அடைந்த வேளையில் இவர் செய்த அப்பட்டமான துரோகத்தை மறைப்பதற்காக முன்பு ஆட்சியில் இருந்த போது நடத்திய செம்மொழி மாநாடும் இப்போது நடத்திய டொசோ மாநாடும் எள்முனை அளவும் உதவவில்லை என்பதை இனியாவது அவர் உணர்வது நல்லது என்று அவர் அதில் தெரிவித்துள்ளார்.