கனடாவில் வீடுகள் விலை உயர்ந்துவிடாது: பொருளியல் வல்லுநர் கருத்து
டொரண்டோ: கனடியர்களை விட இனி புலம்பெயர்ந்தவர்கள்தான் அதிக வீடுகள் வாங்கியிருப்பார்கள். ஆனால் அதற்காக வீடுகளின் விலை உயரும் என்ற அச்சம் தேவையில்லை, விலை உயர்ந்தாலும் இளைஞர்களுக்கு பெற்றோர்கள் உதவுகின்றனர் என்று பொருளியல் வல்லுநர் பெஞ்சமின் கூறியுள்ளார்.
இது தொடர்பாக அவர் கூறியுள்ளதாவது:
கனடாவில் வீட்டு விலை உயரும் என்ற தேவையற்ற அச்சத்தை விட்டு விடுங்கள். தற்போது வீடு வாங்குபவர்களில் 25க்கும் குறைவான வயதுடையவர்கள் பலர் இருக்கின்றனர். இவர்களுக்கு அவர்களின் பெற்றோர்கள் உதவி புரிகின்றனர். கல்விக்கடன் என்பது இந்த இளைஞர்கள் வீடு வாங்குவதற்கு தடையாக இருக்கவில்லை என்று தெரிவித்துள்ளார். புலம்பெயர்ந்தோர் கனடாவில் புது வீடு வாங்கி குடியிருப்பது சாதாரணமாகி விட்டது. இன்னும் பத்தாண்டுகளில் கனடாவை தாய் மண்ணாகக் கொண்டவர்களைக் காட்டிலும் புலம்பெயர்ந்தோரே அதிகமாக வீடு வாங்கியிருப்பர்.
கனடாவிற்குள் வரும் புலம்பெயர்ந்தோர் தங்களின் தொழில் திறமையால் வேலை பார்த்து முன்னேறி சொந்த வீடு வாங்குமளவிற்குப் பண வசதியும் பெறுகின்றனர். புலம்பெயர்ந்தோரின் எண்ணிக்கை உயர உயர கனடாவில் சொந்த வீட்டுக்காரர்களின் எண்ணிக்கையும் உயரும் என்றார்