புகலிடம் கோருவோரை விசாரணை மையங்களில் ஆஸி. அடைக்க எதிர்ப்பு- தமிழர்கள் உட்பட 60 பேர் உண்ணாவிரதம்

இலங்கை, ஈரான், பாகிஸ்தான் உள்ளிட்ட நாடுகளில் இருந்து ஆஸ்திரேலியாவுக்கு புகலிடம் கோரி அகதிகளாக வருவோர் எண்ணிக்கை தொடர்ந்தும் அதிகரித்து வருகிறது. பொதுவாக இப்படி படகுகளில் பயணித்து புகலிடம் கோரி வருவோரை கிறிஸ்துமஸ் தீவில் உள்ள அகதிகள் முகாமில் தடுத்து வைப்பது வழக்கம். இதேபோல் கோக்கோஸ் தீவில் தடுத்து வைப்பதும் நடைமுறை. ஆனால் அண்மைக்காலமாக புகலிடம் கோரி ஆபத்தான படகு பயணம் மூலம் ஆஸ்திரேலியா வருவோரின் எண்ணிக்கை பலமடங்கு அதிகரித்திருக்கிறது. இதனைக் கட்டுப்படுத்தும்விதமாக ஆஸ்திரேலியாவிலிருந்து வெகுதொலைவில் உள்ள நவ்ரூ மற்றும் பப்புவா நியூகினி ஆகிய இடங்களில் உள்ள ஆஸ்திரேலியாவின் விசாரணை மையங்களுக்கு புகலிடம் கோரி வருவோரை அனுப்பி வைக்க அந்நாட்டு நாடாளுமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இதற்கு அரசு சார்பற்ற அமைப்புகளும் மனித உரிமை அமைப்புகளும் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன.
இந்நிலையில் கிறிஸ்துமஸ் தீவில் முகாமில் உள்ள சுமார் 2500 பேரில் ஈழத் தமிழர்கள் உட்பட 60 பேர் ஆஸ்திரேலியாவின் முடிவுக்கு எதிர்ப்புத் தெரிவித்து காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இவர்களில் பெண்களும் குழந்தைகளுடம் அடக்கம். தங்களை வெகுதொலைவில் உள்ள விசாரணை மையங்களுக்கு கொண்டு செல்லக் கூடாது என்பது இவர்களின் கோரிக்கை.
தஞ்சம் போன இடத்திலும் பஞ்சம் பிழைக்கப் போன இடத்திலும் தவியாய் தவிப்பதுதான் தமிழனின் வாழ்க்கையோ?












Click it and Unblock the Notifications