அஸ்ஸாமில் மீண்டும் தலைதூக்கிய கலவரம்: மேலும் 2 உடல்கள் கண்டுபிடிப்பு
குவஹாத்தி: அஸ்ஸாம் மாநிலத்தில் நேற்று மேலும் 2 பேரின் உடல்கள் காட்டுப் பகுதியில் கண்டெடுக்கப்பட்டுள்ளன.
அஸ்ஸாமில் போடோ இனத்தினருக்கும், முஸ்லீம்களுக்கும் இடையே நடந்த இனக் கலவரத்தில் இதுவரை 79 பேர் கொல்லப்பட்டுள்ளனர். கலவரத்தால் வீடுகளை விட்டு வெளியேறிய சுமார் 3 லட்சம் பேர் பல்வேறு முகாம்களில் தங்கியுள்ளனர். இந்நிலையில் அவர்களை வீடுகளுக்கு திரும்புமாறு மாநில அரசு கேட்டுக் கொண்டது. அவ்வாறு திரும்பி வருபவர்களுக்கு உரிய பாதுகாப்பு அளிக்கப்படும் என்றும் அரசு அறிவித்தது.
இதையடுத்து முகாம்களில் தங்கியிருந்த 7 முஸ்லீம்கள் நேற்று முன்தினம் வீடு திரும்பினர். சிராங் மாவட்டத்தை அடைந்தபோது அவர்கள் அனைவரும் படுகொலை செய்யப்பட்டனர். இந்நிலையில் தூப்ரி மாவட்டதின் சுகன்ஜோரா கிரமாத்தில் ஒரு முஸ்லீமின் உடலும், சிராங்கில் மற்றொரு இஸ்லாமியரின் உடலும் கண்டெடுக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவங்களால் முஸ்லீம்கள் முகாம்களில் இருந்து வெளியேற அஞ்சுகின்றனர்.
இது தவிர கலவரத்தால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள கோகரஜார் மாவட்டத்தில் உள்ள சாலகாடி ரயில் நிலையம் அருகே விஷமிகள் ஒரு பெண்ணையும், குழந்தையையும் தாக்கியுள்ளனர். இதில் படுகாயம் அடைந்த அவர்கள் பொங்கைகாவ்ன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
கடந்த 2 நாட்களில் கொல்லப்பட்ட 9 பேரையும் சேர்த்து இதுவரை கலவரத்தில் இறந்தவர்களின் எண்ணிக்கை 88க அதிகரித்துள்ளது.
இதற்கிடையே முகாம்களில் உள்ளவர்கள் போலீசாரிடம் தெரிவிக்காமல் வெளியே எங்கும் செல்லக் கூடாது என்று போலீசார் அறிவுறுத்தியுள்ளனர்.
இதற்கிடையே உல்பா தீவிரவாத இயக்க தளபதி பரேஷ் பருவா இமெயில் மூலம் எச்சரிக்கை விடுத்துள்ளார். அந்த இமெயில் அவர் கூறியிருப்பதாவது,
நாட்டின் பிற பகுதிகளில் வாழும் அஸ்ஸாம் மாநிலத்தவர்கள் மீதான தாக்குதல்கள் நிறுத்தப்படவில்லை என்றால் அஸ்ஸாமில் வாழும் பிற மாநிலத்தவர்கள் மீது தாக்குதல் நடத்தப்படும். மாநிலத்தில் இனவாத வெறுப்பை தூண்டிவிடுவதை முஸ்லீம்கள் நிறுத்த வேண்டும். பிற மாநிலங்களில் வசித்து வந்த அஸ்ஸாமைச் சேர்ந்த 14 இளைஞர்கள் கொல்லப்பட்டுள்ளனர். 2014ம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலை மனதில் வைத்துக் கொண்டு காங்கிரஸ் மற்றும் பாஜக தங்கள் பங்கிற்கு அரசியல் விளையாட்டை ஆடுகின்றன என்று தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications