பாக். குழுவிடம் உள்நாட்டு அரசியலை பேசுவதா?: நிதீஷ்குமாருக்கு ராம்விலாஸ் பஸ்வான் கண்டனம்
லக்னோ: பீகார் மாநிலத்துக்கு வருகை தந்த பாகிஸ்தான் நாடாளுமன்றக் குழுவிடம் உள்நாட்டுஅரசியல் விவகாரங்களை முதல்வர் நிதீஷ்குமார் பேசியதற்கு லோக் ஜனசக்தித் தலைவர் ராம்விலாஸ் பஸ்வான் கண்டனம் தெரிவித்திருக்கிறார்.
இது தொடர்பாக ராம்விலாஸ் பஸ்வான் கூறியுள்ளதாவது:
உள்நாட்டு அரசியல் விவகாரங்களை பாகிஸ்தான் நாடாளுமன்றக் குழுவிடம் எழுப்பியதன் மூலம் நிதீஷ்குமார் தமது அரசியல் முதிர்ச்சியின்மையை வெளிப்படுத்தியுள்ளார். தமக்கு முன்பு ஆட்சியில் இருந்தவரின் பெயரைக் கெடுக்க அவர் முயற்சித்தது சரியானது அல்ல. வெளிநாட்டு விருந்தினர்களின் முன்னால் தங்களது அரசியல் எதிரிகளைத் தாக்குவது, அரசியல் நீதி நெறிமுறைகளுக்கு எதிரானது. வெளிநாட்டவர் முன் ஒற்றுமையைக் காட்டி, நம் நாட்டைப் பிரதிநிதித்துவம் செய்ய வேண்டிய கடமை நமக்கு உள்ளது.
நிலக்கரிச் சுரங்க ஒதுக்கீடு விவகாரத்தில் பிரதமர் மன்மோகன் சிங் ராஜிநாமா செய்ய வேண்டும் என்று தேசிய ஜனநாயகக் கூட்டணி கோருவது சரியல்ல. அரசியல் எதிரிகளை பதவி விலகக் கோருவதற்கு தலைமைத் தணிக்கை அறிக்கை என்பது அளவுகோல் அல்ல. அப்படிப் பார்த்தால், பீகார் அரசில் ரூ.82 ஆயிரம் கோடிக்கு முறைகேடு நடைபெற்றதாக தணிக்கை அதிகாரி அளித்த அறிக்கையைக் கொண்டு நிதீஷ்குமார் பதவி விலகியிருக்க வேண்டும். பீகாரில் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் 5 லட்சம் பெண்களின் கர்ப்பப்பைகளை மருத்துவர்கள் அகற்றியுள்ளனர். இந்தப் பெண்களுக்குத் தலா ரூ.5 லட்சம் இழப்பீட்டை மாநில அரசு வழங்க வேண்டும் என்றார் அவர்.