இன்று கூடுகிறது அதிமுக செயற்குழு.. என்ன செய்யப் போறாங்க?
சென்னை: நிலக்கரி சுரங்க ஒதுக்கீட்டு விவகாரத்தால் இடைத்தேர்தல் வருமா? முன்கூட்டியே பொதுத் தேர்தல் வருமா? என்று விவாதிக்கப்பட்டு வரும் நிலையில் அதிமுகவின் செயற்குழுக் கூட்டம் இன்று சென்னையில் நடைபெற உள்ளது.
சென்னை ராயப்பட்டையில் உள்ள அதிமுக தலைமையகத்தில் அவைத் தலைவர் மதுசூதனன் தலைமையில் ஜெயலலிதா முன்னிலையில் இந்தக் கூட்டம் நடைபெறுகிறது. இக்கூட்டத்தில் அதிமுக தலைமைக் கழக நிர்வாகிகள், மாவட்ட செயலர்கள், எம்.பி.க்கள், எம்.எல்.ஏக்கள், செயற்குழு உறுப்பினர்கள், சிறப்பு அழைப்பாளர்கள் என 250 பேர் இக்கூட்டத்தில் கலந்து கொள்கின்றனர்.
அதிமுக ஆட்சிப் பொறுப்பேற்று ஓராண்டு முடிவடைந்த நிலையில் இக்கூட்டம் நடைபெறுவதால் மாநிலம் முழுவதும் ஓராண்டு சாதனை விளக்கப் பொதுக்கூட்டம் நடத்த தீர்மானம் நிறைவேற்றப்படலாம். இதேபோல் காவிரி நதிநீர் விவகாரம், முல்லைப் பெரியாறு அணை, தமிழக மீனவர் பிரச்சனை தொடர்பான தீர்மானங்கள் நிறைவேற்றபடலாம். டெசோ மாநாட்டை திமுக நடத்தியிருப்பதால் ஈழத் தமிழர் பிரச்சனையிலும் முக்கியமான தீர்மானம் ஒன்றை நிறைவேற்றக் கூடும்.
இதேபோல் நிலக்கரி ஊழலில் பாஜக என்ன மாதிரியான அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கும்? அதிமுக எத்தகைய நடவடிக்கையை எடுப்பது என்பது குறித்தும் இக்கூட்டத்தில் விவாதிக்கப்படலாம். ஒருவேளை பாஜக எம்.பிக்கள் கூண்டோடு ராஜினாமா செய்தால் அதிமுக மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கை குறித்தும் இன்றைய அதிமுக செயற்குழுக் கூட்டம் விவாதிக்கக் கூடும் எனத் தெரிகிறது.












Click it and Unblock the Notifications