தமிழக வாழ்வுரிமை பிரச்சனைகளுக்காக போராட கூட்டு ஆலோசனை: வேல்முருகன்
சென்னை: தமிழகம் எதிர்நோக்கியிருக்கும் வாழ்வுரிமை பிரச்சனைகளுக்குத் தீர்வு காண அனைத்து கட்சி, இயக்கங்கள் பங்கேற்கும் ஆலோசனைக் கூட்டம் ஒன்றுக்கு தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் நிறுவனரான முன்னாள் எம்.எல்.ஏ. தி.வேல்முருகன் அழைப்பு விடுத்திருக்கிறார்.
இது தொடர்பாக வேல்முருகன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:
எம் தமிழ் உறவுகளே!
உரிய உரிமை இருந்தும் தமிழனுக்கு காவிரி நீரை தர மறுக்கும் கர்நாடகம்! தென்தமிழகத்து வாழ்வாதாரமாம் முல்லைப் பெரியாறை தரைமட்டமாக்க கடப்பாரை தூக்கும் கேரளம்! வடதமிழகத்து பாலாற்றைப் பாலைவனமாக்க கங்கணம் கட்டும் அடாவடி ஆந்திரம்! காக்கை குருவிகளாய் வங்கக் கடலில் தமிழக மீனவர்களை சுட்டுப் படுகொலைசெய்யும் சிங்களம்! முள்வேலி வதைமுகாம்களைவிட கொடூரங்கள் கோலோச்சும் தமிழகத்து அகதி முகாம்கள்! தமிழனை ஏமாற்றி கொல்லைப்புறத்தில் கொடுங்கோல் சிங்களவனுக்கு ஆயுத பயிற்சி கொடுக்கும் இந்திய அரசு! ஊழல்பேர்வழிகளால் சுரண்டியெடுக்கப்படும் தமிழகத்து இயற்கை வளங்கள்...இன்னும்...இன்னும்.. தமிழ்த்தேசம் எதிர்நோக்கும் இன்னபிற வாழ்வுரிமை சிக்கல்களுக்கு தீர்வு காண வாருங்கள் தமிழர்களே! மூன்று தமிழருக்காய் வெந்தணலுக்கு தமை ஈந்த தோழர் செங்கொடியின் காஞ்சிபுரம் நினைவரங்கில் தமிழராய் ஒன்று கூடுவோம்! சாதி மதங்கள் கட்சிகள் இயக்கங்களை கடந்து தமிழராய் ஒன்று கூடி உரிமைப் போரில் வெல்ல வியூகம் வகுப்போம்! உறவுகளே! உரிமைக்கு குரல் கொடுக்க ஒன்று கூடி விவாதிப்போம்! வாருங்கள்!
இடம்: தோழர் செங்கொடி நினைவரங்கம், காஞ்சிபுரம். நேரம்: செவ்வாய்க்கிழமை (நாளை) மாலை 3 மணி (28.08.12) என்று அதில் கூறப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications