சென்னை கஸ்தூரிபாய் அரசு மருத்துவமனையில் பெருச்சாளி கடித்து குழந்தை இறந்ததா?
சென்னை ஐஸ்அவுஸ் பகுதியைச் சேர்ந்த ரஞ்சித்குமார் என்ற துப்புறவுத் தொழிலாளியின் மனைவி மலருக்கு 2 வாரத்திற்கு முன்பு பிரசவ வலி ஏற்பட்டதைத் தொடர்ந்து இந்த மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு கடந்த 15ம் தேதி அழகான பெண் குழந்தையைப் பெற்றெடுத்தார் மலர்.
குழந்தை பிறந்தபோது வழக்கமான எடையில் இல்லாததால் சிசுவை இங்குபேட்டரில் வைத்துப் பராமரித்து வந்தனர். இந்த நிலையில் நேற்று மாலை, மலரிடம் வந்த டாக்டர்கள் குழந்தை திடீரென இறந்து போய் விட்டதாக கூறியுள்ளனர். காலை 9 மணிக்கு குழந்தையின் உடலைத் தருவோம் என்றும் கூறியுள்ளனர்.
குழந்தை இறந்ததால் மலர் மற்றும் குடும்பத்தினர் பெரும் துயரத்தில் மூழ்கினர். இந்த நிலையில் இன்று காலை குழந்தையின் உடலை குடும்பத்தாரிடம் ஒப்படைத்தனர் டாக்டர்கள். அப்போது குழந்தையின் உடலை எலி கடித்தது போன்ற அடையாளம் இருந்தது. கன்னம், மூக்கு ஆகியவை குதறப்பட்டு காணப்பட்டது. இதைப் பார்த்து உறவினர்கள் அதிர்ச்சியும், ஆவேசமும் அடைந்தனர்.
பெருச்சாளி கடித்துத்தான் குழந்தை இறந்துள்ளது. ஆனால் டாக்டர்கள் இதை மறைத்து விட்டு நாடகமாடுவதாக கூறி போராட்டத்தில் குதித்தனர். ஆனால் டாக்டர்கள் அதை மறுத்தனர். அலர்ஜி காரணமாக முகம் சுருங்கியிருக்கலாம் என்று கூறினர். ஆனால் இதை உறவினர்கள் ஏற்கவில்லை. அங்கேயே உட்கார்ந்து போராட்டத்தில் குதித்தனர்.
மருத்துவமனையில் சுத்தம், சுகாதாரம் மருந்துக்கும் இல்லை. நாய்கள் இங்கு சகஜமாக நடமாடுகின்றன. பெருச்சாளிகள் குறித்து சொல்லவே வேண்டாம். இப்படிப்பட்ட மோசமான நிர்வாகம் நடப்பதால்தான் குழந்தை இறந்து விட்டதாக கூறி போராட்டத்தில் ஈடுபட்டனர். தகவல் அறிந்து போலீஸார் விரைந்து வந்து சமாதானப் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.