சிபிஐ எம்எல்ஏ கொலை, கிரானைட் வழக்கில் கைது-கிருஷ்ணகிரி போலீஸார் மீது தா.பா. குற்றச்சாட்டு
ஒசூர்: பெண்களை இரவு நேரங்களில் காவல் நிலையத்துக்கு அழைத்து விசாரணை என்ற பெயரில் கிருஷ்ணகிரி மாவட்டக் காவல் துறையினர் துன்புறுத்தியுள்ளனர் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் தா.பாண்டியன் குற்றம் சாட்டியுள்ளார்.
கொலை வழக்கில் கைதாகி சிறையில் உள்ளார் கிருஷ்ணகிரி மாவட்டம் தளி தொகுதியைச் சேர்ந்த இந்திய கம்யூனிஸ்ட் எம்.எல்.ஏ ராமச்சந்திரன். இவர் மீதும் இவரது மனைவி உள்ளிட்ட குடும்பத்தினர் மீதும் நூற்றுக்கணக்கான கோடி கிரனைட் குவாரி முறைகேடு வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந் நிலையில் கிருஷ்ணகிரி மாவட்டக் காவல் துறையைக் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் ஒசூர் காமராஜ் காலனியில் பொதுக் கூட்டம் நடந்தது. அதில் பேசிய தா.பாண்டியன்,
தமிழகத்தில் முதல்வர் ஜெயலலிதா ஆட்சிக்கு வந்தது முதல் ஓராண்டுக்கும் மேலாக மாநிலம் முழுவதும் போலீஸார் 34,000 நிலப் பறிப்பு வழக்குகளை பதிவு செய்துள்ளனர். இதில் 14 வழக்குகள் தீர்த்து வைக்கப்பட்டுள்ளன.
ஓராண்டாக நிலப் பறிப்பு வழக்குகள் பதிவு செய்யப்பட்ட போதும், தளி எம்எல்ஏ டி.ராமச்சந்திரன் மீது எந்தப் புகாரும் எழவில்லை. பெரியார் தி.க. மாவட்ட அமைப்பாளர் பழனிச்சாமி கொலைச் சம்பவத்துக்குப் பிறகு, ராமச்சந்திரன் மீது கிருஷ்ணகிரி மாவட்ட போலீஸார் பொய் வழக்குப் போட்டுள்ளனர்.
ஒசூர் பார்வதி நகரில் உள்ள 3,000 குடிசைகளை அகற்றிவிட்டு, அங்கு சொகுசு பங்களா கட்ட வருவாய்த் துறையினர் திட்டமிட்டிருந்தனர். ஏழைகளுக்காகப் போராடி அவர்களது வீடுகளை அகற்றாமல் போராட்டம் நடத்தியவரை பொய் வழக்குப் போட்டு சிறையில் அடைத்துவிட்டு, தற்போது அவர்களை அகற்ற வருவாய்த் துறையினர் திட்டமிட்டுள்ளனர்.
பி.எஸ்.திம்மசந்திரம் கிராமத்தில் ஏழை விவசாயிகள் சாகுபடி செய்த நிலத்தில் இருந்து அவர்களை அகற்றிவிட்டு, கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த ஆலம் பாஷாவுக்கு தமிழக அரசு புறம்போக்கு நிலத்தை தாரை வார்க்கவே தற்போது தளி எம்எல்ஏ மீது பொய் வழக்குப் போட்டு அவரை காவல் துறையினர் சிறையில் அடைத்துள்ளனர்.
மேலும் பெண்களை இரவு நேரங்களில் காவல் நிலையத்துக்கு அழைத்து விசாரணை என்ற பெயரில் கிருஷ்ணகிரி மாவட்டக் காவல் துறையினர் துன்புறுத்தியுள்ளனர் என்றார் தா.பாண்டியன்.
இக் கூட்டத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணு, மாநில துணைச் செயலாளர் சி.மகேந்திரன், எம்எல்ஏக்கள் ஆறுமுகம், உலகநாதன், முத்துப்பாண்டி, சுந்தரம், எம்பி லிங்கம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.












Click it and Unblock the Notifications