கழுகுமலை அருகே தீண்டாமை வேலி: தமிழக அரசுக்கு மனித உரிமை ஆணையம் நோட்டீஸ்
தூத்துக்குடி: கழுகுமலை அருகே காலனியைச் சுற்றியுள்ள தீண்டாமை முள்வேலி குறித்து விளக்கம் கேட்டு தமிழக அரசுக்கு மனித உரிமை ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
தூத்துக்குடி மாவட்டம் கழுகுமலை அருகே உள்ள வேலாயுதபுரத்தில் இரு பிரிவினர் வசித்து வருகின்றனர். கடந்த 2006ம் ஆண்டு தீர்த்தவாரி எடுத்து வந்த காலனியைச் சேர்ந்த சுப்பிரமணியன் என்பவரை ஒரு பிரிவினர் தாக்கினர். தொடர்ந்து 2007ல் இதே பிரிவைச் சேர்ந்த இளம்பெண் சுபா தற்கொலை செய்து கொண்டார். சாதியை சொல்லி திட்டியதால் அவர் தற்கொலை செய்தததாக போலீசில் புகார் கொடுக்கப்பட்டது. இந்த சம்பவம் நடந்த அடுத்த மாதம் சுந்தரம் என்பவர் தாக்கப்பட்டார். இவ்வாறு தொடர்ந்து பிரச்சனை ஏற்பட்டதால் இரு பிரிவினரிடையே மோதல் போக்கு இருந்து வந்தது.
பகை முற்றிய நிலையில் 2006ம் ஆண்டில் காலனியைச் சுற்றி மற்றொரு பிரிவினர் முள்வேலி அமைத்தனர். இதனால் தங்களின் நடமாட்டம் முற்றிலும் முடக்கப்பட்டதாக பாதிக்கப்பட்ட மக்கள் அதிகாரிகளிடம் புகார் செய்தனர். புகாரை விசாரித்த அதிகாரிகள் தங்களின் சொந்த நிலத்தில் விவசாயிகள் வேலி அமைத்திருப்பதாக கூறி வழக்கை முடித்துக் கொண்டனர். இந்நிலையில் முள்கம்பி வேலி குறித்து விளக்கம் கேட்டு தமிழக அரசுக்கு மனித உரிமை ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
இது குறித்து காலனியைச் சேர்ந்த பெண் ஒருவர் கூறுகையில்,
பெண்கள் ஒதுங்குவதற்கு கூட 1 கி்மீ சுற்றி தான் செல்ல வேண்டும். சுமார் 6 ஆண்டுகளாக இந்த அவஸ்தையை அனுபவிக்கிறோம். குடிநீர் விநியோகம் கூட அடிக்கடி நி்ன்றுவிடுகிறது. எங்களுக்கு கடையில் பொருட்கள் தருவதில்லை. கடந்த வாரம் பஸ் ஏறச் சென்ற என் தம்பி மனைவிக்கு திடீரென மூக்கு உடைந்து ரத்தம் கொட்டிய போது தண்ணீர்கூட கொடுக்க மறுத்துவிட்டனர் என்றார்.