ராம்தேவின் பீடம் அறக்கட்டளை அந்தஸ்தை இழக்கிறது: வருமான வரித்துறை நடவடிக்கை
டெல்லி: சமுதாய சேவை செய்யும் அறக்கட்டளை என்று கூறிக் கொண்டு வருமான வரி கட்டாமல் ஏமாற்றி வந்த ராம்தேவின் பதஞ்சலி யோகா பீடத்தின் 'அறக்கட்டளை' என்ற அங்கீகாரம் ரத்து செய்யப்படவுள்ளது. இதையடுத்து அந்த அமைப்பு வரிகளைக் கட்ட வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது.
வெளிநாடுகளில் இந்தியர்கள் பதுக்கி வைத்துள்ள கறுப்பு பணத்தை மீட்க வேண்டும் என்று கோரி பாபா ராம்தேவ் போராட்டம் நடத்தி வருகிறார்.
ஆனால், இவர் நடத்தி வரும் பதஞ்சலி யோகா பீடம் பல்வேறு வரி, அன்னிய செலாவணி முறைகேடுகளில் ஈடுபட்டுள்ளதாக புகார்கள் வந்துள்ளன. இது குறித்து வருமான வரித்துறையும் அமலாக்கப் பிரிவும் விசாரணை நடத்தி வருகின்றன.
இதில் அறக்கட்டளை என்ற பெயரில் இயங்கும் பதஞ்சலி யோகா பீடம் பல நூறு கோடி வர்த்தகத்தில் ஈடுபட்டு பல கோடி லாபம் அடைந்து வருவது தெரியவந்தது.
ஆனால், சமூக சேவைகளுக்காக நடத்தப்படும் அறக்கட்டளை என்ற பெயரில் தான் பெறும் நன்கொடை மற்றும் வருமானத்துக்கு வருமான வரி கட்டாமல் தவிர்த்து வந்துள்ளார் ராம்தேவ்.
அறக்கட்டளைகள் வர்த்தக ரீதியில் செயல்பட்டால் அவை வருமான வரி செலுத்த வேண்டும் என்பது சட்டம். ஆனால், இதை தர்ம அறக்கட்டளை என்று கூறிக் கொண்டு வருமான வரி கட்டாமல் இருந்துள்ளனர்.
ராம்தேவ் அறக்கட்டளையில் சோதனை நடத்திய வருமான வரித்துறையினர், அந்த அறக்கட்டளை வர்த்தகரீதியில் செயல்பட்டு ரூ. 72 கோடிக்கு வருமானம் ஈட்டியதை கண்டுபிடித்துள்ளனர். இந்த வருமானத்துக்கு வரி கட்ட வேண்டும் என்றும் வருமான வரித்துறையினர் நோட்டீஸ் அனுப்பியுள்ளனர்.
மேலும் பதஞ்சலி யோகா பீடத்துக்குத் தரப்பட்டுள்ள அறக்கட்டளை அந்தஸ்தை ரத்து செய்யவும் வருமான வரித்துறை முடிவு செய்துள்ளது. இன்னும் ஓரிரு நாட்களில் இதற்கான அறிவிப்பு வெளியாகும் என்று தெரிகிறது.