அசோக்வர்தன் ஷெட்டியின் விருப்ப ஓய்வுக்கு எதிரான தமிழக அரசின் மனுவை தள்ளுபடி செய்தது சென்னை ஹைகோர்ட்
சென்னை: தமிழக ஐ.ஏ.எஸ். அதிகாரி அசோக்வர்தன் ஷெட்டியை விருப்ப ஓய்வில் செல்ல அனுமதிக்க வேண்டு என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
அசோக்வர்தன் ஷெட்டி விருப்ப ஓய்வில் செல்ல மத்திய நிர்வாக தீர்பாயம் அனுமதித்திருந்தது. ஆனால் இதை எதிர்த்து தமிழக அரசு சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. அசோக்வர்தன் ஷெட்டி மீதான விசாரணை நிலுவையில் இருக்கிறது என்பது தமிழக அரசின் வாதம்.
தமிழக அரசின் தலைமை செயலாளர் தேபேந்திரநாத் சாரங்கி சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கை நீதிபதிகள் எலிப்பி தர்மாராவ், எம்.வேணுகோபால் ஆகியோர் விசாரித்தனர்.
இந்த வழக்கில் தமிழக அரசு சார்பில் முன்வைக்கப்பட்ட வாதம்:
அசோக்வர்தன் ஷெட்டி 3.9.1983 அன்று நேரடி ஐ.ஏ.எஸ். அதிகாரியாக பணியில் சேர்ந்தார். அவர் 28 ஆண்டுகள் மட்டுமே பணி செய்துள்ளார். அகில இந்திய பணிகள் (இறப்பு மற்றும் ஓய்வூதியம் பலன்கள்) விதி 16(2)-ன் படி விருப்பஓய்வு பெற விரும்பும் அதிகாரி 30 ஆண்டுகள் பணி செய்திருக்க வேண்டும், அல்லது 50 வயது கடந்து இருக்க வேண்டும். ஆனால், அசோக்வர்தன் ஷெட்டி தன் 30 ஆண்டுகள் பணியை 3.9.2013 அன்றுதான் முடிக்கிறார். எனவே விதி 16(2ஏ) கீழ் 29.12.2011 அன்று விருப்ப ஓய்வு பெற அசோக்வர்தன் ஷெட்டி அனுமதி கோருவது சரியானது அல்ல. மத்திய நிர்வாக தீர்ப்பாயம் சட்டவிதிகளில் தவறு செய்துள்ளது. எனவே தீர்ப்பாயத்தின் உத்தரவை ரத்து செய்யவேண்டும் என்று வாதிடப்பட்டது.
அசோக்வர்தன் ஷெட்டி தரப்பிலான பதில் வாதத்தில், விதி 16(2) ன் படி 30 ஆண்டுகள் பணி செய்திருக்க வேண்டும் அல்லது 50 வயதை கடந்திருக்கவேண்டும். அசோக்வர்தன் ஷெட்டி பிறந்த தேதி 31.7.1957 அன்று பிறந்தவர். அவருக்கு 50 வயது பூர்த்தியாகிவிட்டது. ஆனால் தமிழக அரசு விதி 16(2ஏ) பிரிவை தவறாக மேற்கொள் காட்டுகிறது. இந்த விதிகளின் கீழ் விருப்ப ஒய்வு பெற அனுமதி மறுப்பது சட்டவிரோதமாகும் என்று வாதிடப்பட்டது.
மத்திய பணியாளர் மற்றும் ஓய்வூதியம் அமைச்சகம் சார்பில் ஆஜரான கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் எம்.ரவீந்திரனும் தமிழக அரசுக்கு எதிராக வாதிட்டார்.
அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், தமிழக அரசு தவறான விதிகளுடன் உயர்நீதிமன்றத்தை நாடியுள்ளது என்பதை கூற எங்களுக்கு எந்த தயக்கமும் இல்லை. மேலும் ஐ.ஏ.எஸ். அதிகாரிகளை கட்டுப்படுத்தும் அமைப்பான மத்திய அரசும், தமிழக அரசின் நிலை தவறானது என்று கூறியுள்ளது. இதனால் அசோவர்தன் ஷெட்டியை விருப்ப ஓய்வில் செல்ல அனுமதிப்பதுடன் அவருக்கான ஓய்வூதிய பலன்களை 8 வாரங்களில் வழங்க வேண்டும் என்றும் உத்தரவிட்டனர்.