எவ்வளவோ சொன்னேனே, கேட்டீர்களா: சுங்க அதிகாரிகளை காய்ச்சு காய்ச்சிய விமான பயணி
சென்னை: பிரான்ஸ் செல்லும் விமானத்தில் செல்லும் ஒரு தம்பதி ஸ்பீக்கரில் போதைப் பொருள் கடத்துவதாக வந்த தகவலை அடுத்து அவர்கள் விமானத்தில் இருந்து இறக்கப்பட்டு தீவிர சோதனை நடத்தப்பட்டது.
புதுச்சேரியைச் சேர்ந்தவர் ஜோசப் (65). அவரது மனைவி மரியசெல்வி (60). பிரான்ஸ் நாட்டு குடியுரிமை பெற்ற அவர்கள் பிரான்ஸ் செல்ல நேற்று இரவு மீனம்பாக்கம் விமான நிலையத்திற்கு வந்தனர். அங்கு வழக்கமான சோதனைகளை முடித்துக் கொண்டு லுப்தான்சா விமானத்தில் ஏறினர். நள்ளிரவு 2 மணி அளவில் விமானம் பறக்க இருக்கின்ற நேரத்தில் சுங்க அதிகாரிகளுக்கு ஒரு போன் வந்தது. அதில் பேசிய நபர் ஜோசப், மரியசெல்வி தம்பதி ஸ்பீக்கரில் போதைப் பொருள் கடத்துவதாகக் கூறிவிட்டு இணைப்பைத் துண்டித்தார்.
இதையடுத்து விமானம் நிறுத்தப்பட்டது. உடனே சுங்க அதிகாரிகள் 340 பயணிகள் இருந்த விமானத்துக்குள் சென்று ஜோசப், மரியசெல்வியிடம் சோதனை நடத்தினர். அப்போது ஸ்பீக்கரில் மண் இருந்தது. இதையடுத்து அதிகாரிகள் அந்த வயதான தம்பதியை விமானத்தில் இருந்து கீழே இறக்கினர். அதன் பிறகு மீதமுள்ள பயணிகளுடன் விமானம் பிரான்ஸுக்கு புறப்பட்டது.
முதலில் கீழே இறங்க மறுத்து பிறகு வேறு வழியில்லாமல் இறங்கிய அவர்கள் வைத்திருந்த ஸ்பீக்கரை கழற்றி அதிகாரிகள் ஆய்வு செய்தனர். ஸ்பீக்கர் பாடுகையில் நவீன சவுண்ட் சிஸ்டத்திற்கு ஏற்ப ஆடாமல் இருக்க கடல் மணலை அதன் உள்ளே போட்டதாக ஜோசப் தெரிவித்தார். ஆனால் அதிகாரிகள் அவரை நம்பாமல் போதைப் பொருள் நிபுணர்களை வரவழைத்து மண்ணை ஆய்வு செய்ய வைத்தனர். ஆய்வில் அது வெறும் கடல் மண் தான் போதைப் பொருள் எதுவும் கலக்கப்படவில்லை என்பது தெரிய வந்தது.
இதைக் கேட்ட ஜோசப் ஆத்திரமடைந்தார். நாங்கள் எவ்வளவு சொல்லியும் கேட்காமல் விமானத்தில் இருந்து இறக்கி சோதனை செய்து அவமானப்படுத்திவிட்டீர்கள் என்று கோபமாகத் தெரிவித்தார். இதையடுத்து அதிகாரிகள் அவரிடம் மன்னிப்பு கேட்டுவிட்டு அவர்களை மும்பைக்கு அனுப்பி, அங்கிருந்து வேறு ஒரு லுப்தான்சா விமானத்தில் பிரான்ஸ் அனுப்பி வைப்பதாக உறுதியளித்தனர்.
அதன்படி அந்த தம்பதி பிரான்ஸுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.