சென்னைக்கு வந்த பேருந்தில் 5 கிலோ தங்க நகை அபேஸ்: போலீஸ் தீவிர விசாரணை
சென்னை: மதுரையில் இருந்து சென்னை வந்த பேருந்தில் பயணம் செய்த நகை வியாபாரிகள் இருவரிடம் இருந்து 5 கிலோ தங்க நகை கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மும்பையைச் சேர்ந்த பிரபல நகை வியாபாரி சஞ்சய் ஜெயின். அவர் தங்க நகைகளை வடிவமைத்து தமிழகத்தில் உள்ள நகை கடைகளுக்கு விற்பனை செய்து வருகிறார். கடந்த 25ம் தேதி அவர் 10 கிலோ தங்க நகைகளை தனது ஊழியர்கள் குசால்பால்சிங் (28), மனோஜ் (25) ஆகியோரிடம் கொடுத்து தமிழகத்தில் உள்ள கடைகளில் கொடுக்குமாறு கூறினார். அவர்கள் இருவரும் விமானம் மூலம் மும்பையில் இருந்து மதுரைக்கு வந்தனர்.
அவர்கள் அங்கிருந்து இருந்து நெல்லை, கோவையில் உள்ள நகை கடைகளுக்கு சென்று நகைகளை கொடுத்துவிட்டு மதுரைக்கு திரும்பினர். பிறகு மதுரையில் மதுரையில் இருந்து ஆம்னி பஸ் மூலம் சென்னைக்கு கிளம்பினர். சென்னையில் உள்ள நகைக் கடைகளில் கொடுப்பதற்காக அவர்கள் 5 கிலோ தங்க நகைகளை வைத்திருந்தனர்.
ஆம்னி பஸ் விழுப்புரம் அருகே சென்று கொண்டிருக்கையில் அவர்கள் இருவரும் தூங்கிவிட்டனர். பஸ் கோயம்பேட்டில் வந்து நின்றபோது தான் கண்விழித்தனர். அப்போது அவர்கள் வைத்திருந்த 5 கிலோ நகைகள் இருந்த சூட்கேஸ் மற்றும் பையைக் காணாமல் போனதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். உடனே அவர்கள் கோயம்பேடு காவல் நிலையத்திற்கு சென்று புகார் கொடுத்தனர். ஆம்னி பஸ் வரும் வழியில் பெருங்களத்தூரில் நின்றதால் கொள்ளையர்கள் அங்கு இறங்கியிருக்கலாம் என்று சந்தேகித்த போலீசார் அவர்களை பீர்க்கன்காரணை காவல் நிலையத்தில் புகார் கொடுக்குமாறு அறிவுறுத்தினர்.
இதையடுத்து இருவரும் பீர்க்கன்காரணை போலீசில் புகார் கொடுத்தனர். ஆனால் அங்கு அவர்கள் அலைக்கழிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. இதையடுத்து அவர்கள் மும்பையில் உள்ள முதலாளிக்கு போன் செய்தனர். அவர் சென்னை கமிஷனர் திரிபாதியிடம் புகார் கொடுத்தார். இதையடுத்து திரிபாதியின் உத்தரவின்பேரில் பீர்க்கன்காரணை போலீசார் திருட்டு சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்து அந்த 2 பேரிடமும் விசாரித்து வருகிறார்கள்.
நகைக்கடை ஊழியர்களுக்கு இந்த திருட்டில் தொடர்பு உள்ளதா என்று கோணத்திலும் விசாரணை நடந்து வருகிறது. அவர்கள் நகை வைத்திருந்ததை அறிந்த யாரோ மதுரையில் இருந்து அவர்களை பின்தொடர்ந்து வந்து அவர்கள் கண் அசந்த நேரத்தில் திருடியிருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கின்றனர்.