ஊழல் அரசாங்கத்தை வழிநடத்துகிற மன்மோகன்சிங்.. ஜோக்குகளின் நாயகனாகிவிட்டார்:வாஷிங்டன் போஸ்ட் வறுவல்

"India's ‘silent' prime minister becomes a tragic figure" என்ற தலைப்பிலான கட்டுரையில் பிரதமர் மன்மோகன்சிங் பற்றி கூறப்பட்டுள்ளதாவது:
இந்தியா- அமெரிக்கா இடையேயான உறவுக்கும் இந்திய பொருளாதார சீர்திருத்தங்களுக்கும் மிக முக்கிய காரணமாக இருந்த மன்மோகன்சிங்கின் ஆளுமை பெரும் சரிவை நோக்கிச் சென்றுகொண்டிருக்கிறது. ஊழல் மலிந்த அரசாங்கத்தை வழிநடத்தக் கூடியவராக இருக்கிறார்.
கடந்த இரண்டுவாரங்களாக நிலக்கரி சுரங்க ஒதுக்கீட்டு ஊழலால் மன்மோகன்சிங்கின் ராஜினாமாவை கோரி ஒவ்வொரு நாளும் நாடாளுமன்றத்தை எதிர்க்கட்சிகள் முடக்கி வைத்துக் கொண்டிருக்க்ன்றன. 2-வது முறையாக அவர் ஆட்சிப் பொறுப்பேற்றபோது இருந்த அவர் மீதான மதிப்பு சரிந்து போய்விட்டது. இந்தியாவின் பொருளாதாரமும் பெரு வீழ்ச்சியடைந்து விட்டது.
மன்மோகன்சிங் ஆட்சிக்காலத்தில் பொருளாதார சீர்திருத்தங்கள் முடங்கிப் போய்விட்டன. இந்தியாவின் வளர்ச்சியும் கணிசமாக குறைந்துபோய் ரூபாய் மதிப்பு பெருவீழ்ச்சி கண்டிருக்கிறது. மன்மோகன்சிங் எப்பொழுதுமே மெளனமாக இருப்பதால் அவரது அமைச்சரவை சகாக்கள் தங்களது சொந்த பாக்கெட்டில் பணத்தை நிரப்புகின்றனர்.
ஜோக்குகளின் நாயகன்
கூட்டங்களிலும் மாநாடுகளிலும் செல்போனை சைலண்ட் மோடுக்கு மாற்றுங்கள் என்பதற்குப் பதிலாக "மன்மோகன்சிங் மோடுக்கு" மாற்றுங்கள் என்று சொல்லும் அளவுக்கு ஜோக்கராகிவிட்டார். மன்மோகன்சிங்கைப் பற்றி ஒரு பல் மருத்துவர் சொன்ன ஜோக் இது... என்னுடைய கிளினிக்கிலாவது மன்மோகன்சிங் வந்து வாயைத் திறக்க வேண்டும்...
மன்மோகன்சிங் கடைசியாக வாயை திறந்தது கடந்த வாரம்தான்.. நிலக்கரித்துறை அமைச்சராக அவர் பதவி வகித்த காலத்தில் தனியார் நிறுவனங்களுக்கு நிலக்கரி சுரங்க ஒதுக்கீட்டை செய்ததன் மூலம் நாட்டுக்கு பெரும் இழப்பு ஏற்பட்டிருக்கிறது என்று தலைமை கணக்கு அதிகாரியின் அறிக்கை குற்றம்சாட்டியிருந்ததற்கு பதில் அளித்த போதுதான் வாயைத் திறந்தார்...அப்போதும் கூட "என்னுடைய மவுனம் பல ஆயிரம் பதில்களைவிட சிறந்தது" என்று கூறியிருந்தார் மன்மோகன்சிங் என்று அதில் எழுதப்பட்டிருக்கிறது.
இதற்கு முன்னர் டைம் பத்திரிகை "செயல்படாத பிரதமர்" என்று விமர்சித்திருந்தது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications