கியூபெக்கில் ஆட்சியைப் பிடித்தது பிரிவினைவாத கட்சி! தனிநாட்டுக்கான வாக்கெடுப்பு ஒத்திவைப்பு!
கியூபெக் மாகாணத் தேர்தல் செப்டம்பர் 4-ந் தேதி நடைபெற்றது. இத் தேர்தலில் பிரிவினைவாதம் கோரும் "பிகியூ" கட்சி மொத்தம் உள்ள 125 இடங்களில் 56 இடங்களைக் கைப்பற்றியிருக்கிறது. கடந்த 9 ஆண்டுகாலமாக ஆட்சியில் இருந்த லிபரல்கள் கட்சி 48 இடங்களையே கைப்பற்றியுள்ளது. கடந்த தேர்தலில் இக்கட்சி 64 இடங்களைப் பெற்றிருந்தது.
இத்தேர்தலில் பிகியூ கட்சி வெற்றி பெற்றதன் மூலம் பெளலின் மரோய்ஸ் கியூபெக்கின் முதலாவது பெண் பிரதமராகிறார்.
இதற்கு முன்னர் பிகியூ ஆட்சிப் பொறுப்பில் இருந்த 1980 மற்றும் 1995ஆம் ஆண்டுகளில் கனடாவிலிருந்து பிரிந்து சென்று தனியரசை அமைப்பது தொடர்பாக கியூபெக்கில் பொதுவாக்கெடுப்பு நடத்தப்பட்டது. மிகச் சொற்பமான வாக்கு விழுக்காட்டில் இந்த பொதுவாக்கெடுப்பு தோல்வியைச் சந்தித்தது. இதனால் இம்முறையும் பிகியூ கட்சி பிரிந்து சென்று தனியரசை அமைப்பதற்கான பொதுவாக்கெடுப்பு நடத்தும் என்று கூறப்படுகிறது. இருப்பினும் முழுப் பெரும்பான்மை இல்லாத காரணத்தாலும் அண்மையில் நடத்தப்பட்ட கருத்துக் கணிப்பில் தனிநாட்டுக்கான ஆதரவு குறைந்திருப்பதாக கூறப்பட்டதாலும் உடனடியாக பொதுவாக்கெடுப்பு நடத்தப்படமாட்டாது என்றே கூறப்படுகிறது
மேலும் கனடா மத்திய அரசிடம் இருந்து கூடுதலான அதிகாரங்களை கியூபெக் மாகாணத்துக்கு அளிக்குமாறு பிகியூ கட்சி வலியுறுத்தக் கூடும் என்றும் அப்படியான கோரிக்கையை கனேடிய மத்திய அரசு மறுக்கும்போது அப்போது எழும் ஆதரவு அலை மூலம் பிகியூ கட்சி பொதுவாக்கெடுப்பை நடத்தலாம் என்பதும் அரசியல் பார்வையாளர்களின் கருத்து.