சிவகாசி வெடிவிபத்து: குத்தகைக்காரர் உள்பட 12 பேர் கைது, ஆலை உரிமையாளருக்கு வலை
விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள முதலிபட்டியில் சுமார் 10 ஏக்கர் நிலப்பரப்பில் செயல்பட்டு வந்த ஓம் சக்தி பட்டாசு ஆலையில் நேற்று முன்தினம் பயங்கர வெடி விபத்து ஏற்பட்டது. இதில் 38 பேர் உடல் கருகி பலியாகினர், 60க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.
ஓம் சக்தி பட்டாசு ஆலையின் உரிமையாளர் சிவகாசியைச் சேர்ந்த விருதுநகர் ஒன்றிய அதிமுக கவுன்சிலர் முருகேசன், ஆலையை குத்தகைக்கு எடுத்த பால்பாண்டி மற்றும் சிலர் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்தனர். இதையறிந்து தலைமறைவான அவர்களைப் பிடிக்க தனிப்படைகள் அமைக்கப்பட்டது.
இதையடுத்து ஆலையை குத்தகைக்கு எடுத்து நடத்திய ராஜு மகன் பால்பாண்டி(30). ஒப்பந்ததாரர்கள் செல்வம் மகன் ஸ்ரீகாந்த், சிங்கராஜ் மகன் அண்ணாதுரை, போர்மேன் உதயகுமார்(29), மகேந்திரன்(29), கெமிக்கல் மிக்சர் பாண்டிதுரை(24), கணக்கு பிள்ளை பாண்டீஸ்வரன், சண்முகராஜா, காளியப்பன், பாண்டியராஜா உட்பட 12 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதில் மகேந்திரனும், பாண்டிதுரையும் பால்பாண்டியின் தம்பிகள்.
தலைமறைவாக உள்ள ஆலை உரிமையாளர் முருகேசனைப் பிடிக்க 10 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன என்று விருதுநகர் எஸ்.பி. நஜ்மல் ஹோடா தெரிவித்துள்ளார்.