கூடங்குளம் பிரச்சனை: ஸ்ரீரங்கம் செல்லும் வழியில் ஜெயலலிதாவுக்கு கறுப்புக் கொடி- 13 பேர் கைது
முதல்வர் ஜெயலலிதா இன்று காலை சென்னையில் இருந்து தனி விமானம் மூலம் பகல் 11.15 மணிக்கு திருச்சி விமான நிலையத்தை அடைந்தார். விமான நிலையத்தில் அமைச்சர்கள் ஓ.பன்னீர்செல்வம், நத்தம் விஸ்வநாதன், என்.ஆர்.சிவபதி, மாவட்ட கலெக்டர் ஜெயஸ்ரீ முரளிதரன், மாவட்ட செயலாளர் மனோகரன் எம்.எல்.ஏ., குமார் எம்.பி., மேயர் ஜெயா ஆகியோர் சிறப்பான வரேவேற்பு அளித்தனர்.
இதையடுத்து அவர் காரில் ஸ்ரீரங்கம் சென்றார். அங்கு தெற்குச் சித்திரை வீதி-மேலச் சித்திரை வீதி சந்திப்பில் பகல் 11.45 மணிக்கு துவங்கிய அரசு விழாவில் கலந்து கொண்டார். அப்போது அவர் மேலூரில் ரூ.8.67 கோடி மதிப்பில் அமைக்கப்படும் வண்ணத்துப்பூச்சி பூங்கா, ஸ்ரீரங்கம்- திருவானைக்காவல் பாதாள சாக்கடை திட்டம், ஸ்ரீரங்கம் உள்விளையாட்டு அரங்கம் உள்ளிட்ட புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார். மேலும் திருச்சி மண்டல கலை பண்பாட்டு மையம் உள்ளிட்ட முடிவடைந்த திட்டப் பணிகளை துவங்கி வைத்து, நலத்திட்ட உதவிகளை வழங்கி உரை நிகழ்த்தினார்.
இதையடுத்து ஸ்ரீரங்கம் அரங்கநாதர் கோவிலுக்கு சென்ற அவருக்கு கோவில் நிர்வாகம் சார்பில் பூரண கும்ப மரியாதையும், வரவேற்பும் அளிக்கப்பட்டது. கோவிலில் உள்ள ஆயிரம்கால் மண்டபத்தில் நாள் முழுவதும் அன்னதானம் வழங்கும் திட்டத்தை துவக்கி வைத்தார். அங்கிருந்த பக்தர்களுக்கு முதல்வரின் விருப்பப்பட்டியல்படி சென்னையைச் சேர்ந்த பிரபல சமையல் கலைஞர் அறுசுவை நடராஜனின் மகன் குமார் தலைமையில் 120 பணியாளர்கள் சமைத்த உணவு பரிமாறப்பட்டது.
முதல் பந்தியில் 333 பேர் உணவு உண்டனர். அவர்களுக்கு இனிப்பு வகைகள் உள்பட 16 வகையான அறுசுவை உணவு வழங்கப்பட்டது. இங்கு முதல்வர் அன்னதான திட்டத்தை துவங்கிய அதே நேரத்தில் பழனி முருகன் கோவிலிலும் நாள் முழுவதும் அன்னதானம் வழங்கும் திட்டம் துவங்கப்பட்டது.
அவரின் வருகையையொட்டி திருச்சியில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டது. மேலும் அப்பகுதியே விழாக்கோலம் பூண்டிருந்தது. திருச்சி விமான நிலையத்தில் இருந்து ஸ்ரீரங்கம் செல்லும் வழியில் ஜெயலலிதாவை வரவேற்க சாலையின் இருபுறத்திலும் ஆண்களும், பெண்களும் நின்றிருந்தனர். அவர்களைப் பார்த்து முதல்வர் கை அசைத்தவாறே சென்றார்.
ஆனால் டிவிஎஸ் டோல்கேட் பகுதியில் கூடங்குளம் பிரச்சனை குறித்து மக்கள் கலை இலக்கியக் கழகம் சார்பில் ஜெயலலிதாவுக்கு கறுப்புக் கொடி காட்டப்பட்டது. இதைத் தொடர்ந்து கறுப்புக் கொடி காட்டிய 13 பேர் கைது செய்யப்பட்டனர்.