மேலூர் அருகே கண்மாய்க்குள் 3 அடுக்காக அடுக்கி புதைக்கப்பட்டிருந்த கிரானைட் கற்கள்
மேலூர்: மேலூர் அருகே கண்மாய் ஒன்றுக்குள் 3 அடுக்காக அடுக்கி கிரானைட் கற்கள் புதைக்கபப்ட்டிருந்தது அம்பலத்துக்கு வந்தது. இப்படி கண்மாய்க்குள் புதைக்கப்பட்டிருக்கும் கிரானைட் கற்களைக் கண்டுபிடிக்க அதி நவீன சேலர் கருவிகளை இங்கிலாந்திலிருந்து மதுரை மாவட்ட நிர்வாகம் வாங்கியுள்ளது.
தமிழகத்தையே உலுக்கி எடுத்து வருகிறது மதுரை, கிருஷ்ணகிரி மாவட்ட கிரானைட் கொள்ளை. இதில் முக்கிய குற்றவாளிகளில் ஒருவரான பி.ஆர்.பழனிச்சாமி உள்ளிட்ட பலரும் சிக்கியுள்ளனர். இவர்களுக்கு உடந்தையாக இருந்த அதிகாரிகளும் பிடிபட்டுள்ளனர். இன்னமும் சோதனை நடத்தப்பட்டு வருகிறது.
இந்நிலையில் மேலூர் கீழவளவை அடுத்த இ. மலம்பட்டியில் உள்ள நவக்குடி கண்மாய் மழை வெள்ளத்தால் நிரம்பியதால் மேலும் ஒரு திடுக்கிடும் தகவல் வெளியாகி இருக்கிறது. மழைவெள்ளத்தால் மணல் கரைந்து ஓட தண்ணீரும் தேங்காமல் போய்விட்டது. ஆனால் தரைக்குள் புதைக்கப்பட்டிருந்த கிரானைட் கற்கள் மட்டும் பளிச்சிட்டு தெரிந்திருக்கின்றன. இது தொடர்பாக மாவட்ட நிர்வாகத்துக்கு தகவல் கொடுக்கப்பட்டது.
இதைத் தொடர்ர்ந்து கண்மாய்க்குள் அதிகாரிகள் சோதனை நடத்தினர். 3 அடுக்குகளாக கண்மாய்க்குள் கிரானைட் கற்கள் அடுக்கி புதைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது. இப்படி பல ஆயிரம் கற்கள் கண்மாய்க்குள் இருக்கக் கூடும் எனத் தெரிகிறது. இந்த கற்களை புதைத்த கிரானைட் நிறுவனம் எது என்பது தொடர்பாக வருவாய்த்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்,.
அதிநவீன லேசர் கருவிகள்
நிலத்தடியில் புதைக்கப்பட்டிருந்த கிரானைட் கற்களைக் கண்டுபிடிக்க ஏற்கெனவே சென்னை அண்ணா பல்கலைக் கழகத்தின் ஆளில்லா சிறுரக விமானம் பயன்படுத்தப்பட்டது. இந்நிலையில் மேலூர் சுற்றுவட்டாரத்தின் 23 நீர் நிலைகளுக்குள் புதைக்கப்பட்டிருக்கும் கிரானைட் கற்களைக் கண்டுபிடிக்க அதி நவீன லேசர் கருவிகளை இங்கிலாந்து நாட்டிலிருந்து வாங்கியுள்ளனர். இக்கருவிகளைக் கொண்டு இன்று முதல் நீர் நிலைகளில் சோதனை நடத்தப்பட உள்ளது.