இன்று திறக்கப்படுகிறது மேட்டூர் அணை...!
தென் மேற்குப் பருவ மழை சற்று லேட்டாகப் பெய்து வருகிறது. கர்நாடகத்தின் காவிரி நீர்ப்பிடிப்புப் பகுதிகளிலும், கேரளாவின் வயநாடு பகுதியிலும் மழை பெய்து வருவதால் கர்நாடகத்தில் காவிரி ஆற்றின் குறுக்கே உள்ள கபிணி மற்றும் கிருஷ்ணராஜ சாகர் ஆகிய அணைகளுக்கு நல்ல நீர்வரத்து உள்ளது.
மேலும், உச்சநீதிமன்றத்தின் உத்தரவுப்படி தற்போது கர்நாடகம் தண்ணீர் திறந்து விட்டு வருகிறது. இதனால் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து வரத் தொடங்கியுள்ளது.
இதையடுத்து மேட்டூர் அணையிலிருந்து இன்று நீர் திறந்து விடுமாறு முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.
இன்று பகல் 12 மணிக்கு மேட்டூர் அணையின் வலது கரையில் நடைபெறும் விழாவில் தமிழக அமைச்சர்கள், மாவட்ட ஆட்சியர், பொதுப் பணித் துறை அதிகாரிகள் பங்கேற்கின்றனர். மேட்டூர் பொதுப் பணித் துறை அதிகாரிகள் தண்ணீர் திறப்புக்கான ஆயத்தப் பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.
ஞாயிற்றுக்கிழமை மாலை மேட்டூர் அணைக்கு வினாடிக்கு 11,287 கன அடி நீர் வந்தது. அணையின் நீர்மட்டம் 83.56 அடியாக இருந்தது. குடிநீர் தேவைக்காக வினாடிக்கு 2,005 கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டது. நீர் இருப்பு 45.59 டி.எம்.சியாக இருந்தது.