இந்திய ராணுவ ரகசியங்களை விற்க முயன்ற வழக்கு: இலங்கை செல்லும் க்யூ பிரிவு போலீஸ்
திருச்சி: இந்திய ராணுவ ரகசியங்களை பாகிஸ்தானுக்கு விற்க முயன்ற வழக்கு தொடர்பாக விசாரணை நடத்த க்யூ பிரிவு போலீசார் இலங்கை செல்ல திட்டமிட்டுள்ளனர்.
தஞ்சையில் காய்கறி ஏற்றுமதி வியாபாரம் செய்து வந்த தமீம் அன்சாரி பாகிஸ்தானில் உள்ள தீவிரவாத அமைப்புகளுக்கு உளவாளியாக செயல்படுவதாகவும், இந்திய ராணுவ ரகசியங்களை அவர்களுக்கு விற்க இருப்பதாகவும் க்யூ பிரிவு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து அவர்கள் அன்சாரியை ரகசியமாக கண்காணித்து வந்தனர்.
இந்நிலையில் இந்திய ராணுவ ரகசியங்கள் அடங்கிய சி.டி.க்கள், முக்கிய ஆவணங்களுடன் இலங்கை செல்ல முயன்ற அவர் திருச்சி டோல்கேட் பகுதியில் கடந்த செவ்வாய்க்கிழமை கைது செய்யப்பட்டார். முதல் கட்ட விசாரணையில் அவர் தென்னிந்தியாவில் உள்ள ராணுவ பயிற்சி மையங்கள், துறைமுகங்கள், அணு மின் நிலையங்கள், கடற்படை தளங்கள் உள்ளிட்டவற்றை படம் பிடித்து அவற்றை சிடியில் ஏற்றி இலங்கையில் உள்ள பாகிஸ்தான் தூதரகத்தில் இருக்கும் ஐ.எஸ்.ஐ. தொடர்பு அதிகாரி பாஸ் என்கிற அமீர் மூலமாக பாகிஸ்தானுக்கு அனுப்ப முயன்றது தெரிய வந்துள்ளது.
மேலும் அவர் விசாகப்பட்டினம் சென்று அங்குள்ள துறைமுகம், நீர்மூழ்கி கப்பல் ஆகியவற்றையும் படம் பிடிக்கத் திட்டமிட்டிருந்தார். ஆனால் அதற்குள் போலீசாரிடம் சிக்கியுள்ளார்.
அவரிடம் இருந்து பாஸ்போர்ட், சி.டி.க்கள். பென்டிரைவ் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன. இது குறித்து வழக்குப் பதிவு செய்த க்யூ பிரிவு போலீசார் தமீம் அன்சாரியை முதல் குற்றவாளியாகவும், அவரை பாகிஸ்தான் அதிகாரியிடம் அறிமுகம் செய்து வைத்த இலங்கையில் வாழும் தமிழர் ஹாஜியை 2வது குற்றவாளியாகவும், தூதரக அதிகாரியை 3வது குற்றவாளியாகவும் சேர்த்துள்ளனர்.
இதையடுத்து ஹாஜி மற்றும் தூதரக அதிகாரியிடம் விசாரணை நடத்த மத்திய உளவுத் துறை உதவியுடன் க்யூ பிரிவு போலீசார் இலங்கை செல்ல முடிவு செய்துள்ளனர். இது தவிர திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள அன்சாரியை தங்கள் காவலில் எடுத்து விசாரிக்கவும் அவர்கள் முடிவு செய்துள்ளனர்.












Click it and Unblock the Notifications