இடிந்தகரையில் போராட்டக்குழுவினருக்கு மதிமுகவினர் மருத்துவ சிகிச்சை
கடந்த சில வாரங்களுக்கு முன்பு கூடங்குளம் அணுமின்நிலையத்தை முற்றுகையிட முயன்ற மீனவர்களையும், போராட்டக்குழுவினரையும் தடியடி நடத்தியும், கண்ணீர் புகை குண்டுகளை வீசியும் போலீசார் கலைத்தனர்.
இதில் பலர் காயமடைந்தனர். போலீசார் வீசிய கண்ணீர் புகை குண்டுகள் காலாவதியானவை என்பதால் போராட்டத்தில் ஈடுபட்டவர்களுக்கு கண் எரிச்சல் தோல் அலர்ஜி போன்றவை ஏற்பட்டது. இதனால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு சிகிச்சை அளிக்கவேண்டும் என்று இடிந்தகரைக்கு வந்த வைகோ தெரிவித்திருந்திருந்தார். இதனையடுத்து மதிமுக வின் மருத்துவ அணியைச் சேர்ந்த டாக்டர் சதன் திருமலைக்குமார் தலைமையில் மருத்துவர்கள் சம்பத் குமார், கார்த்திக், சுகுணன், சுரேஸ்பாபு ஆகியோர் சனிக்கிழமையன்று இடிந்தகரைக்கு சென்று மருத்துவ சிகிச்சை அளித்தனர்.
கண் எரிச்சலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு விரைவில் கண் சிகிச்சை முகாம் நடத்தப்படும் என்றும் மருத்துவர்கள் உறுதியளித்துள்ளனர். இந்த மருத்துவ முகாமில் நெல்லை மாவட்ட மதிமுக செயலாளர் சரவணன், துணைச்செயலாளர் மின்னல் முகமது அலி, மாணவர் அணிச்செயலாளர் டி.எம். ராஜேந்திரன் உள்ளிட்ட மதிமுக வினர் பங்கேற்றனர்.