3 பேரைப் பலி வாங்கிய சிவகாசி பட்டாசு விபத்து... வி.ஏ.ஓ, தலையாரி சஸ்பெண்ட்
சிவகாசி: சிவகாசி அருகே 28ம் தேதி நடந்த பட்டாசு விபத்தில் 3 பேர் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக போலீஸார் வீடு வீடாக சட்டவிரோதமாக பட்டாசுத் தயாரிப்பது தொடர்பாக ரெய்டு நடத்தியுள்ளனர்.மேலும் பட்டாசு விபத்து தொடர்பாக கிராம நிர்வாக அலுவலர், தலையாரி ஆகியோரை அரசு சஸ்பெண்ட் செய்துள்ளது.
சிவகாசி அருகே உள்ள தாயில்பட்டியை அடுத்த விஜயகரிசல்குளத்தில் செல்லப்பாண்டியன் என்பவரின் வீட்டில் முறையான அனுமதி பெறாமல் பட்டாசு தயாரித்து வந்துள்ளனர். மேலும் அதே வீட்டில் உள்ள ஒரு அறையில் பட்டாசுகளை பதுக்கி வைத்திருந்ததாகவும் கூறப்படுகிறது. தீபாவளி பண்டிகை நெருங்குவதால் பட்டாசு தயாரிக்கும் பணிகள் மும்முரமாக நடந்து வந்துள்ளது.
28ம் தேதி காலை அந்த வீட்டில் பட்டாசு தயாரித்துக் கொண்டிருக்கையில் பட்டாசுகள் திடீர் என்று வெடித்துச் சிதறி தீ விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் பாக்கியராஜ், குமார் உள்பட 3 பேர் உடல் கருகி பலியானார்கள். இது குறித்து தகவல் அறிந்த போலீசாரும், தீயணைப்பு படையினரும் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். செல்லப்பாண்டியன் ஜெயலலிதா பேரவை ஒன்றிய செயலாளர் சண்முகையாவின் உறவினர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த சம்பவத்தில் தற்போது போலீஸார் விசாரணையை முடுக்கி விட்டுள்ளனர். விஜயகரிசல்குளத்தில் வீடுகளில் சட்டவிரோதமாக பட்டாசுகள் தயாரிக்கப்படுகிறது என்பதால் போலீஸார் வீடு வீடாக சோதனையிட்டனர்.
மேலும் இந்த சம்பவம் தொர்பாக தற்போது கிராம நிர்வாக அலுவலர் சக்தி கணேஷ், தலையாரி குழந்தைவேலு ஆகிய இருவரையும் அரசு சஸ்பெண்ட் செய்துள்ளது.
வீடுகளில் முறையான அனுமதி இல்லாமல், சட்டவிரோதமாக பட்டாசு தயாரிக்கப்படுவது குறித்து இவர்கள் வருவாய்த்துறைக்குத் தகவல் தெரிவிக்கத் தவறியதால் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.