காவிரி: எதியூரப்பா தர்ணா... இது பாஜக போராட்டம் இல்லை என அறிவிப்பு!

இது பாஜக சார்பில் நடத்தப்படும் போராட்டம் அல்ல என்றும் எதியூரப்பா அறிவித்துள்ளார். இதன்மூலம் பாஜகவிலிருந்து அவர் விலகுவது கிட்டத்தட்ட உறுதியாகிவிட்டது.
முதலில் எம்.ஜி.ரோட்டில் உள்ள காந்தி சிலை போராட்டம் நடத்துவதாக அறிவித்திருந்தார் எதியூரப்பா. ஆனால், இன்று காலை ஆனந்தராவ் சர்க்கிள் மேம்பாலம் அருகே உள்ள மெளரியா சர்க்கிளில் அவர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார்.
இதில் அவரது ஆதரவு அமைச்சர்கள், எம்பிக்கள், எம்எல்ஏக்கள் உள்பட ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் பேசிய எதியூரப்பா, காவிரி நதி நீர் ஆணையக் கூட்டத்தில் பிரதமர் அவசரப்பட்டு தவறான முடிவை எடுத்துவிட்டார். கர்நாடகத்துக்கு துரோகம் செய்துவிட்டார். தமிழகத்துக்கு தண்ணீர் திறந்துவிடப்படுவது உடனே நிறுத்தப்பட வேண்டும். இது தொடர்பாக கர்நாடக காங்கிரஸ் தலைவர்களும் மத்திய அரசுக்கு நெருக்கடி தர வேண்டும் என்றார்.
இந்தப் போராட்டத்தால் அந்தப் பகுதியிலும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளிலும் போக்குவரத்து முழுவதுமாக பாதிக்கப்பட்டது.
முன்னதாக இது குறித்து முன்னாள் மத்திய அமைச்சரும் எதியூரப்பா ஆதரவாளருமான மூத்த பாஜக தலைவர் தனஞ்செயகுமார் நிருபர்களிடம் கூறுகையில்,
எதியூரப்பாவின் போராட்டம் தனிப்பட்ட முறையிலானது. நாங்கள் பாஜகவில் இருந்தாலும் இந்தப் போராட்டத்தை அவர் தனியாக நடத்துகிறார்.
நாளை (சனிக்கிழமை) கன்னட அமைப்புகள் அறிவித்துள்ள முழு அடைப்பு போராட்டத்திற்கும் எதியூரப்பா தனது முழு ஆதரவை தந்துள்ளார்.
காவிரி விஷயத்தில் மாநில அரசு பொறுப்புடன் நடந்து கொள்ள வேண்டும். மக்களிடையே குழப்பத்தை ஏற்படுத்த முயற்சி செய்யக்கூடாது. இந்த விஷயத்தில் தோல்வி மனோபாவத்தை காட்டாமல் மாநில அரசு சட்டப்போராட்டத்தை தொடர்ந்து மேற்கொள்ள வேண்டும்.
காவிரியில் தமிழகத்துக்கு 9,000 டிஎம்சி நீரைத் திறந்துவிட வேண்டும் என்று பிரதமர் பிறப்பித்துள்ள அறிவியல்பூர்வமற்ற உத்தரவால் மாநிலத்தில் இக்கட்டான நிலை ஏற்பட்டுள்ளது. காவிரி நதிநீர் ஆணைய கூட்டத்திற்கு முன் ஒரு குழுவை அனுப்பி ஆய்வு செய்திருந்தால் உரிய பயன் ஏற்பட்டு இருக்கும். இப்போது குழுவை அனுப்பி என்ன பிரயோஜனம் என்றார் தனஞ்செயகுமார்.
பிரதமர் உத்தரவை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் கர்நாடகம் மனு:
இந் நிலையில் தமிழகத்துக்குத் தண்ணீர் திறந்துவிட வேண்டும் என்ற காவிரி ஆணையத் தலைவரான பிரதமரின் உத்தரவை மறுபரிசீலனை செய்ய உத்தரவிடக்கோரி உச்ச நீதிமன்றத்தில் கர்நாடகம் மனு தாக்கல் செய்துள்ளது.
இது குறித்து முதல்வர் ஜெகதீஷ் ஷெட்டர் நிருபர்களிடம் பேசுகையில், உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி தமிழகத்திற்கு காவிரியில் இருந்து தண்ணீர் திறந்து விட்டுள்ளோம். காவிரி ஆணையத்தின் உத்தரவை மறுபரிசீலனை செய்யக்கோரி உச்ச நீதிமன்றத்தில் வியாழக்கிழமை மனு தாக்கல் செய்துள்ளோம்.
நீர்ப்பாசன மந்திரி பசவராஜ் பொம்மை தலைமையில் அமைச்சர்கள் குழுவினர் கர்நாடக அரசின் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் ஆஜராகும் மூத்த வழக்கறிஞர் பாலி நாரிமன் மற்றும் அவரது குழுவினருடன் தொடர்பில் உள்ளனர். நானும் அந்த வக்கீல்களுடன் தொடர்ந்து தொடர்பில் இருந்து வருகிறேன் என்றார்.












Click it and Unblock the Notifications