தண்ணீர் தர மறுக்கும் கர்நாடகம்... 'பந்த்' முடிந்ததும் கொட்டித் தீர்த்த மழை!
பெங்களூர்: தமிழகத்திற்குத் தண்ணீர் தர மாட்டோம் என்ற கோரிக்கையுடன் கர்நாடகத்தில் நேற்று நடத்தப்பட்ட பந்த் முடிந்தசில மணி நேரங்களிலேயே பெங்களூர் உள்ளிட்ட பகுதிகளில் கன மழை கொட்டித் தீர்த்தது. இயற்கையின் இந்த வினோத பதிலடியால் பெங்களூர் ஸ்தம்பித்துப் போனது.
தற்போதும் கூட உச்சநீதிமன்றம் உத்தரவிட்டதைத் தொடர்ந்தே தண்ணீரைத் திறந்து விட்டுள்ளது கர்நாடக அரசு. இதற்கு அங்குள்ள அமைப்புகள், கட்சிகள், விவசாயிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. தமிழகத்திற்குத் தண்ணீர் தரக் கூடாது என்ற கோரிக்கையுடன் நேற்று பெங்களூர் உள்ளிட்ட 9 மாவட்டங்களில் பந்த் போராட்டமும் நடந்தது.
ஆனால் பந்த் முடிந்த சில மணி நேரங்களிலேயே நேற்று மாலைக்கு மேல் பெங்களூர் உள்ளிட்ட பகுதிகளில் பேய் மழை கொட்டித் தீர்த்து விட்டது. இதனால் தாழ்வான பகுதிகளில் வெள்ளம் போல மழை நீர் ஓடியது. பல பகுதிகளில் குடியிருப்புகளிலும் வெள்ள நீர் புகுந்தது. அடுக்குமாடிக் குடியிருப்புகளில் கீழ்த் தளத்தில் நிறுத்தப்பட்டிருந்த கார்கள் நீரில் மிதக்கும் நிலை ஏற்பட்டது.
நேற்று ஒரே நாளில் பெங்களூரில் மட்டும் 34 மில்லிமீட்டர் மழை பெய்ததாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதேபோல மைசூர், மாண்டியா ஆகிய காவிரி பாசனப் பகுதி மாவட்டங்களிலும் நல்ல மழை கொட்டித் தீர்த்தது.