எஸ்.எம்.கிருஷ்ணாவை டிஸ்மிஸ் செய்யுங்கள்... ராமதாஸ் கோரிக்கை
சென்னை: மத்திய அமைச்சராக இருக்கும் எஸ்.எம்.கிருஷ்ணா, தமிழகத்தின் வாழ்வாதாரத்தை பறிக்கத் துடிக்கிறார்.இவரை இனியும் மத்திய அமைச்சர் பதவியில் நீடிக்க அனுமதிக்கக் கூடாது என்று பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கூறியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
கர்நாடக அணைகளில் தேவைக்கு அதிகமாகவே தண்ணீர் இருக்கும் நிலையில், அங்குள்ள விவசாயிகள் பாதிக்கப்படுவார்கள் என்று கவலைப்படும் எஸ்.எம். கிருஷ்ணாவுக்கு, தண்ணீரே இல்லாமல் அவதிப்படும் தமிழக விவசாயிகளின் துயரம் தெரியாமல் போனது வேதனையான ஆச்சரியம்தான்.
தனது மாநில உழவர்கள் நலமாக இருக்க வேண்டும் என்பதற்காக, இன்னொரு மாநில விவசாயிகளின் வாழ்வாதாரத்தை பறிக்கத் துடிப்பதன் மூலம் ஒட்டு மொத்த இந்தியாவுக்கும் அமைச்சராக இருக்கும் தகுதியை அவர் இழந்து விட்டார்.
இவரால் இந்திய ஒருமைப்பாட்டை கட்டிக்காக்க முடியாது. எனவே, இந்திய அரசியல் சட்டத்திற்கும், தமிழக நலனுக்கும் எதிராக செயல்பட்டு வரும் கிருஷ்ணாவை மத்திய அமைச்சரவையில் இருந்து பிரதமர் நீக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறேன் என்று அவர் கூறியுள்ளார்.