அதிமுகவுக்கு வயசு 41.. 3 நாள் பொதுக் கூட்டங்களுக்கு ஜெ. உத்தரவு
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:
அதிமுக தொடங்கி 40 ஆண்டுகள் நிறைவடைந்து, 17-ந்தேதி 41-ஆவது ஆண்டு தொடங்குவதைக் கொண்டாடும் வகையில், 17-ந்தேதி முதல் 19-ந்தேதி வரை மூன்று நாட்கள் தமிழகத்தில் உள்ள அனைத்து ஒன்றியங்கள், நகரங்கள் மற்றும் பகுதிகளிலும், கழக அமைப்புகள் செயல்பட்டுக் கொண்டிருக்கும் புதுச்சேரி, கர்நாடகா, ஆந்திரா, மகாராஷ்டிரா, கேரளா, புதுடெல்லி மற்றும் அந்தமான் உள்ளிட்ட பிற மாநிலங்களிலும் பொதுக்கூட்டங்கள் நடைபெற உள்ளன.
மாவட்டக் கழகச் செயலாளர்களும், மாவட்டக் கழக நிர்வாகிகளும், தங்கள் மாவட்டத்தில் அறிவிக்கப்பட்டுள்ள பொதுக்கூட்ட நிகழ்ச்சிகளை கழகம், எம்.ஜி.ஆர். மன்றம், ஜெ ஜெயலலிதா பேரவை, எம்.ஜி.ஆர். இளைஞர் அணி, மகளிர் அணி, மாணவர் அணி, அண்ணா தொழிற்சங்கம், வழக்கறிஞர் பிரிவு, சிறுபான்மையினர் நலப்பிரிவு, விவசாயப் பிரிவு, மீனவர் பிரிவு, மருத்துவ அணி, இலக்கிய அணி, அமைப்பு சாரா ஓட்டுநர்கள் அணி, இளைஞர் பாசறை, இளம் பெண்கள் பாசறை உட்பட கழகத்தின் பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்த நிர்வாகிகளுடனும், உள்ளாட்சி அமைப்புப் பிரதிநிதிகளுடனும் இணைந்து சிறப்புப் பேச்சாளர்கள் மற்றும் கலைக் குழுவினருடன் தொடர்புகொண்டு, பொதுக் கூட்டங்களை ஏற்பாடு செய்து சிறப்பாக நடத்திட வேண்டும்.
கழக அமைப்புகள் செயல்பட்டுக் கொண்டிருக்கும் புதுச்சேரி, கர்நாடகா, ஆந்திரா, மகாராஷ்டிரா, கேரளா, புதுடெல்லி மற்றும் அந்தமான் உள்ளிட்ட பிற மாநிலங்களிலும் 17-ந்தேதி ஆங்காங்கே கழகக் கொடியினை ஏற்றி வைத்து இனிப்பு வழங்கி, கழகத்தின் 41-ஆவது ஆண்டு தொடக்க நாளை சிறப்பாகக் கொண்டாடுமாறு கேட்டுக் கொள்கிறேன் என்று கூறியுள்ளார்.
இந்தப் பொதுக் கூட்டங்களில் பேசும் தலைவர்கள் பட்டியலையும் அதிமுக அறிவித்துள்ளது. அதன்படி 17ம் தேதி சென்னை வில்லிவாக்கத்தில் மதுசூதனனும், திருவொற்றியூரில் ஓ.பன்னீர் செல்வமும் பேசுகின்றனர்.
18ம் தேதி மாதவரத்தில் பொன்னையன், தாம்பரத்தில் ஓ.பன்னீர் செல்வம், சைதாப்பேட்டையில் பி.எச்,பாண்டியன் பேசுகின்றனர்.