பிறந்த நாளில் ஏதாவது சொல்வாரா நடராஜன்?

நில அபகரிப்பு உள்ளிட்ட புகார்களின் பேரில் கடந்த பிப்ரவரி மாதம் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருந்த நடராஜன் நேற்று ஜாமீனில் விடுதலையானார். சிறையிலிருந்து வெளியே வந்த பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அவர், என் மீது போடப்பட்ட 6 வழக்குகளுமே பொய்யானவை. எனக்கு எதிராகப் புகார் கொடுத்தவர்களில் ஒருவரைக் கூட நான் நேரில் பார்த்தது இல்லை. இந்த வழக்குகள் அனைத்தும் பொய்யானவை என்பதை நீதிமன்றத்தில் நிரூபிப்பேன்.
எம்.ஜி.ஆர். மறைந்த பிறகு ஜெயலலிதாவுக்குப் பாதுகாப்பாக இருந்தது நானும் எனது மனைவியும் தான். நாங்கள் எந்தத் தவறுமே செய்யவில்லை. துரோகமும் செய்யவில்லை. அதிமுகவை உடைக்கவும் முயற்சிக்கவில்லை.
சசிகலாவை மறைமுகமாக மிரட்டி அவர் பெயரில் ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளனர். அதில் தான் தமக்குத் தெரியாமல் தமது குடும்பத்தினர் தவறு செய்ததாக கூறப்பட்டது.
என்னை சிறையில் அடைத்து மறைமுக அரசியல் செய்து கொண்டிருந்த என்னை நேரடி அரசியலுக்கு வரவழைத்துவிட்டார் ஜெயலலிதா என்றார் அவர்.
இந்த நிலையில், அக்டோபர் 23 ம் தேதி சென்னையில் உள்ள பெரியார் திடலில் நடராஜனின் 70 வது பிறந்த நாள் விழா கொண்டாப்படுகின்றது. கடந்த சில வருடம் வரை இந்த விழா தஞ்சையில் எம்.நடராஜனுக்கு சொந்தமான தமிழரசி மண்டபத்தில் தான் நடைபெற்று வந்துள்ளது. ஆனால் இந்த முறை இந்த விழா சென்னைக்கு மற்றப்பட்டுள்ளது.
இது குறித்து எம். நடராஜனின் ஆதரவாளர்களிடம் கேட்ட போது, எம்.என். பிறந்த நாள் விழா இதுவரை தஞ்சையில் தான் கொண்டாடி வந்தார். தற்போது ஆட்சியாளர்களுக்கும் எம்.என். -க்கும் இடையே பிளவு இருப்பாதல், தஞ்சையில் விழா வைத்ததால் போலீஸ் தடை போட்டுவிடும் என்று கருதியே, சென்னைக்கு விழா மாற்றப்பட்டுள்ளது.
பெரியார் திடலில் வைத்துள்ளதன் மூலம் போலீஸ் உள்ளே வர முடியாது. தடையும் போட முடியாது. அதனால் தான் சென்னையை தேர்வு செய்துள்ளார் என்று கூறுகின்றனர். மேலும் இந்த விழாவின்போது அதிரடி அறிவிப்புகளை அவர் வெளியிடப் போவதாக அவரது ஆதரவாளர்கள் கூறுகின்றனர்.
பார்க்கலாம், என்ன அறிவிக்கப் போகிறார் என்பதை!












Click it and Unblock the Notifications