புனே குண்டுவெடிப்பு: டெல்லியில் 3 இந்தியன் முஜாகிதீன் தீவிரவாதிகள் கைது
டெல்லி: இந்தியன் முஜாகிதீன் அமைப்பைச் சேர்ந்த 3 தீவிரவாதிகளை டெல்லி போலீசார் கைது செய்துள்ளனர். கடந்த ஆகஸ்ட் 1ம் தேதி புனேவில் நடந்த குண்டுவெடிப்புகளை நடத்தியது இவர்கள் தான் என்பதும் தெரியவந்துள்ளது.
முன்னதாக கர்நாடகம், உத்தரப் பிரதேசத்தில் இந்த அமைப்பைச் சேர்ந்த சிலர் கைது செய்யப்பட்டிருந்த நிலையில், டெல்லியில் 3 பேர் சிக்கியுள்ளனர்.
இந்த அமைப்பின் தலைவரான யாசின் பத்கலின் உத்தரவுகளின்படி டெல்லியில் தாக்குதலுக்கு இவர்கள் தயாராகி வந்ததும் தெரியவந்துள்ளது.
இவர்கள் பதுங்கியிருந்த டெல்லி புல் புர்கலாத்பூர் பகுதி வீட்டிலிருந்து வெடி மருந்து, வெடிகுண்டு தயாரிக்கும் பொருட்களும் கைப்பற்றப்பட்டுள்ளன.
டெல்லியில் ஆயுத பூஜையின்போதும், பிகாரில் புத்த கயாவிலும் இவர்கள் தாக்குதல்கள் நடத்தத் திட்டமிட்டிருந்ததும் விசாரணையில் தெரியவந்துள்ளது.
இவர்களைக் கைது செய்ததன் மூலம் நடக்கவிருந்த தாக்குதல்கள் தவிர்க்கப்பட்டுள்ளன.