ஹரியாணாவில் நிலம் வாங்கியதில் ராகுல் காந்தி வரி ஏய்ப்பு செய்தாரா?

காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியின் மருமகன் ராபர்ட் வதேராவின் மீது பல்வேறு மோசடி குற்றச்சாட்டுக்கள் கூறப்பட்டு வரும் நிலையில், அவரது மகனும் காங்கிரஸ் பொதுச் செயலாளருமான ராகுல் காந்தியின் மீதும் வரி ஏய்ப்பு புகார் எழுந்துள்ளது.
ஹரியானா மாநிலத்தில் நிலம் வாங்கியதில் ராகுல் காந்தி பெருமளவில் வரி ஏய்ப்பு செய்துள்ளதாக இந்திய தேசிய லோக் தள் கட்சித் தலைவரும் அம்மாநில முன்னாள் முதலமைச்சருமான ஓம் பிரகாஷ் செளதாலா புகார் கூறியுள்ளார்.
ஹரியானாவின் பால்வால் மாவட்டத்தில் 6.5 ஏக்கர் நிலத்தை கடந்த 2008ம் ஆண்டு ராகுல் காந்தி வாங்கியதாகவும் அப்போது, ரூ. 26 லட்சத்துக்கு வாங்கப்பட்ட நிலத்தை, வெறும் ரூ. 1.5 லட்சத்துக்கு வாங்கியதாக விலையைக் குறைத்துக் காட்டி வரி ஏய்ப்பு செய்து, பத்திரப் பதிவு செய்யப்பட்டதாக செளதாலா குற்றம் சாட்டியுள்ளார். மேலும் இது குறித்து உச்ச நீதிமன்ற நீதிபதியைக் கொண்டு விசாரணை நடத்த வேண்டும் என்றும் அவர் கோரியுள்ளார்.
ஆனால், செளதாலாவின் குற்றச்சாட்டை காங்கிரஸ் மறுத்துள்ளது. ஒரு ஏக்கருக்கு ரூ. 1.58 லட்சம் வீதம் மொத்தம் ரூ.4.1 லட்சத்துக்கு அதை ராகுல் வாங்கியதாகவும், அதற்கான வரியை முழுமையாக செலுத்தியுள்ளதாகவும் காங்கிரஸ் கூறியுள்ளது.
இது குறித்து காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் ரஷீத் ஆல்வி கூறுகையில், ராகுலை குறை சொல்லும் முன் முதலில் செளதாலா தன்னையும் தனது மகன்களையும் ஒருமுறை திரும்பிப் பார்த்துக் கொள்ள வேண்டும்.
ஒழுங்காக வரியை செலுத்தி ஒரு நிலத்தை ராகுல் வாங்கியது கூட தப்பா?. அவர் ஒரு நிலம் கூட வாங்கக் கூடாதா?. இதில் அவர் எவ்வளவு வரியை செலுத்தினார், பத்திரப் பதிவு கட்டணமாக எவ்வளவு செலுத்தினார் என்பதெல்லாம் பத்திர ஆபிஸ் ஆவணங்களைப் பார்த்தாலே தெரியாதா?.
இந்த நிலம் வாங்கியதில் எந்த ஒளிவு மறைவும் இல்லை. ராகுல் தனது பெயரிலேயே வாங்கியுள்ளார். செக் மூலம் தான் பணத்தை நிலம் விற்றவருக்குத் தந்துள்ளார்.
ராகுலை குறை சொல்ல தனக்கு எந்தத் தகுதியாவது உண்டா என்று ஒருமுறை செளதாலா யோசித்துப் பார்க்க வேண்டும் என்றார்.












Click it and Unblock the Notifications