''3 மாத சம்பளத்தை 3 பார்ட்டா தர்றோம்''... கிங்பிஷர் ஊழியர்கள் நிராகரிப்பு!

செப்டம்பர் 30ம் தேதி முதல் கிங்பிஷர் நிறுவனம் தொடர்ந்து பல்வேறு சிக்கல்களைச் சந்தித்து வருகிறது. மேலும் அதன் சேவையும் முடங்கிப் போயுள்ளது. முதலில் நிறுவனத்தின் பைலட்டுகளும், என்ஜீனியர்களும் ஸ்டிரைக்கில் குதித்தனர். அடுத்து கிங்பிஷர் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் லைசென்ஸ் ரத்து செய்யப்பட்டது. இதனால் கடந்த ஒரு மாதமாக நிறுவன ஊழியர்கள் பெரும் தவிப்பில் உள்ளனர்.
ஆனால் உரிமையாளர் விஜய் மல்லையாவும், அவரது மகன் சித்தார்த் மல்லையாவும் வெளிநாடுகளில் சுற்றிக் கொண்டிருக்கிறார்கள்.
இந்த நிலையில், ஊழியர்களுக்கான 3 மாத சம்பளத் தொகையை 3 பகுதிகளாகப் பிரித்துத் தருவதாகவும், பணிக்குத் திரும்புமாறும் நேற்று ஒரு அறிவிப்பை வெளியிட்டது கிங்பிஷர் நிறுவனம். அதன்படி முதல் தவணை 24 மணி நேரத்தில் வழங்கப்படும். அடுத்த தவணை 7 நாட்களுக்குள்ளும், மூன்றாவது தவணை தீபாவளிக்கு முன்பு நவம்பர் 13ம் தேதியும் வழங்கப்படும் என்றும் நிறுவனம் அறிவித்தது. மேலும் நான்காவது தவணை சம்பளத்தை டிசம்பருக்குள் அளிக்க முயற்சிப்பதாகவும் கிங்பிஷர் அறிவித்தது.
ஆனால் இந்த அழைப்பை ஊழியர்கள் நிராகரித்து விட்டனர். நான்கு மாத சம்பளத்தையும் மொத்தமாக 2 நாட்களுக்குள் தர வேண்டும் என்று அவர்கள் கோரியுள்ளனர்.
இதுகுறித்து டெல்லி என்ஜீனியரிங் பிரிவில் பணியாற்றி வரும் சுபாஷ் சந்திர மிஸ்ரா கூறுகையில், இந்த யோசனையை நாங்கள் நிராகரிக்கிறோம். சிஇஓ சஞ்சய் அகர்வால் மற்றும் செயல் துணைத் தலைவர் ஹிதேஷ் பட்டேலை நாங்கள் நம்பவில்லை. விஜய் மல்லையாவுடன் பேச வேண்டும். எங்கே போய் விட்டார் அவர். ஏன் அவர் அமைதியாக இருக்கிறார்.
இதற்கு முன்பும் இப்படி பல உறுதிமொழிகளை அவர்கள் அளித்துள்ளனர். ஆனால் இந்த முறை ஏமாற நாங்கள் தயாராக இல்லை என்றார்.
இதற்கிடையே, கிங்பிஷர் ஏர்லைன்ஸ் நிறுவனம் மீண்டும் செயல்படும் என்ற நம்பிக்கை தனக்கு இல்லை என்று சிவில் வி்மானப் போக்குவரத்து அமைச்சர் அஜீத் சிங் கூறியுள்ளார். அது மிகவும் கஷ்டம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications