கனமழை எதிரோலி: நெல்லையில் மின்சாரம் தாக்கி தந்தை-மகன் உட்பட 3 பேர் பலி
நெல்லை: நெல்லை மாவட்டத்தில் பெய்த கனமழையில் சில இடங்களில் மின் வயர்கள் அறுந்து விழுந்தது. இதில் மின்சாரம் தாக்கிய தந்தை, மகன் உட்பட மொத்தம் 3 பேர் பலியாகினர். ஒருவர் லேசான காயத்துடன் உயிர் தப்பினார்.
நெல்லை மாவட்டம் களக்காடு அருகே சிங்கிகுளம் மேலத்தெருவை சேர்ந்த கூலி தொழிலாளி இசக்கி(48). இவரது மனைவி வேணி. இவர்களுக்கு மணிகண்டன், இசக்கிமுத்து என்ற இரு மகன்களும், ஒரு மகளும் உள்ளனர்.
மணிகண்டன் நெல்லையில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் பிஎஸ்சி 2ம் ஆண்டு படித்து வந்தார். இசக்கிமுத்து ஆரல்வாய்மொழியில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் என்ஜினியரிங் படித்து வந்தார்.
தசரா பண்டிகை விடுமுறைக்காக இருவரும் ஊருக்கு வந்திருந்தார். களக்காடு பகுதியில் கடந்த 23ம் தேதி காலை முதல் பலத்த மழை பெய்தது. இதில் தெருக்களில் தண்ணீர் குளம் போல் தேங்கி நின்றது.
நேற்று அதிகாலை 6.30 மணிக்கு மணிகண்டன் அங்குள்ள ஆற்றிற்கு செல்வதற்காக வீட்டு அருகே நடந்து சென்றார். அப்போது சாலையோரத்தில் உள்ள மின்கம்பத்தில் இருந்த மின்வயர் அறுந்து தெருவில் தேங்கியிருந்த மழைநீரில் விழுந்து கிடந்தது.
இதை கவனிக்காத மணிகண்டன் அந்த தண்ணீரை மிதித்தார். இதில் அவரது மீது மின்சாரம் பாய்ந்தது. மணிகண்டனின் அலறல் சத்தம் கேட்டு வீட்டிலிருந்த தந்தை இசக்கியும், தம்பி இசக்கிமுத்துவும் ஓடி வந்தனர்.
அவர்கள் இருவரும் சேர்ந்து மணிகண்டன் தண்ணீரில் இருந்து வெளியே தள்ளிவிட்டனர். இதில் மணிகண்டன் தண்ணீரில் இருந்து வெளியே போய் விழுந்தார். ஆனால் வேகமாக ஓடிவந்த இசக்கிமுத்துவும், இசக்கியும் நிலைத்தடுமாறி மின்சாரம் பாய்ந்து கொண்டிருந்த தண்ணீரில் விழுந்தனர். இதில் இருவர் மீதும் மின்சாரம் பாய்ந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியாகினர். மணிகண்டன் லேசான காயத்துடன் உயிர் தப்பினார்.
மற்றொரு சம்பவம்:
நெல்லை கழுகுமலை வேளார் தெருவை சேர்ந்த ஜெயக்கொடி மகன் சேகர். இவர் அதே பகுதியை சேர்ந்த சுப்பையா மகன் ராஜா என்பவருடன் அங்குள்ள ஒரு வீட்டில் வெள்ளை அடித்து கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராத வகையில் வீட்டு மாடி வழியாக சென்ற மின்வயர் சேகரின் தலையின் மீது உரசியது.
இதில தூக்கி வீசப்பட்டு காயமடைந்த சேகரை, தீயணைப்பு படையினர் மீட்டு தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அவரை பரிசோதித்த டாக்டர்கள், ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தார். இது குறித்து கழுகுமலை இன்ஸ்பெக்டர் பொறுப்பு செல்வராஜ் விசாரித்து வருகிறார்.