ஈழத் தமிழர் அரசியல் தீர்வுக்கான பொதுவாக்கெடுப்புக்கு இந்தியா அழுத்தம் கொடுக்க வேண்டும்: கருணாநிதி
சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய கருணாநிதி, டெசோ மாநாட்டு தீர்மானங்களையும், தி.மு.க.வின் கருத்துக்களும் அடங்கிய விரிவான மனுவை ஐ.நா. மன்றத்தில் மு.க.ஸ்டாலின், டி.ஆர்.பாலு ஆகியோர் நேரில் வழங்கினார்கள். அதில் டெசோ இயக்கத்தின் சார்பில் தி.மு.க. தலைவர் என்ற முறையில் நான் கையெழுத்திட்டு உள்ளேன். இலங்கையில் ஏற்கனவே நடைபெற்ற இப்போது நடந்து கொண்டு இருக்கிற நிலவரங்கள் பற்றி ஐ.நா. துணைப் பொதுச் செயலாளர் ஸ்டாலினிடமும், டி.ஆர்.பாலுவிடமும் நேரடியாக கேட்டு தெரிந்து கொண்டு உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்துள்ளார். இந்த முன்னேற்றம் ஈழத் தமிழர்களின் வாழ்வாதாரத்தையும், அரசியல் எதிர் காலத்தையும் ஒளிமயமாக ஆக்குவதற்கு பயன்படும் என்ற நம்பிக்கையை பெற்றுள்ளோம்.
1961,1985ல் திமுகவும் ஈழமும்
நாங்கள் கொடுத்த ஆவணத்தோடு இலங்கையில் நடந்த கொடூர காட்சிகளையும் சி.டி.யாக தயாரித்து இணைத்துள்ளோம். தி.மு.க. இலங்கை தமிழர்களுக்காக ஐ.நா. மன்றத்தை அணுகுவது இது முதல் முறை அல்ல. ஏற்கனவே 1961-ம் ஆண்டு தூத்துக்குடியில் நடந்த தி.மு.க. பொதுக்குழுவில் இலங்கை தமிழர் பாதுகாப்பு பற்றி தீர்மானம் நிறைவேற்று ஐ.நா. சபை தலையிட்டு தமிழர்களை பாதுகாக்க கோரிக்கை வைத்தோம். 1985-ம் ஆண்டு 1கோடி கையெழுத்து பெற்ற அனுப்பி வைத்தோம். இப்போது பலவேறு விரும்பத்தகாத நிகழ்ச்சிகள் நடைபெற்று தமிழர்கள் கண்ணீரும் செந்நீரும் வடிக்கும் நிலை உள்ளது. இனி மேலாவது ஈழத்தமிழர்களுக்கு விடிவு காலம் ஏற்பட வேண்டும். அதற்கு அனைத்து நாடுகளும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும். அதற்கான முயற்சியை ஐ.நா. சபை எடுக்க வேண்டும். தேவையான ஒத்துழைப்பை இந்திய அரசும் வழங்க வேண்டும். இலங்கை பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காண பொது வாக்கெடுப்பு நடத்த வலியுறுத்தி உள்ளோம். அதை செயல்படுத்த இலங்கை அரசுக்கு இந்திய அரசு அழுத்தம் கொடுக்க வேண்டும் என்றார்.
தனிநாடு அல்ல..
பின்னர் பொதுவாக்கெடுப்பு என்பது தனிநாட்டுக்கானதா? என்று செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு, இலங்கையில் ஈழம் பிரிந்து தனி நாடு உருவாக்க வேண்டும் என்பது டெசோ தீர்மானம் அல்ல. தமிழர்களிடையே பொது வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்று வலியுறுத்தி உள்ளோம். அதில் நன்மை விழையும் என்று நம்புகிறோம் என்றார்.
இலங்கைக்கு ராணுவ பயிற்சி கூடாது
மேலும் இந்தியாவில் இலங்கை படையினருக்கு ராணுவ பயிற்சி அளிக்கப்படுவது பற்றிய கேள்விக்கு, இலங்கை ராணுவத்தினருக்கு தமிழ்நாட்டில் மட்டு மல்ல, இந்தியாவின் எந்தப் பகுதியிலும் பயிற்சி அளிக்க கூடாது. தமிழ்நாடும் இந்தியாவில்தான் இருக்கிறது என்றார் கருணாநிதி.