அஸ்ஸாமில் மீண்டும் கலவரம் வெடித்தது: 2 பேர் படுகொலை
கவுஹாத்தி: அஸ்ஸாமின் கோக்ரஜார் மாவட்டத்தில் மீண்டும் இனக்கலவரம் ஏற்பட்டதில் 2 பேர் படுகொலை செய்யப்பட்டனர் என்று போலீஸ் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
அஸ்ஸாம் மாநிலத்தில் சட்டவிரோதமாக குடியேறிய வங்கதேசத்தினருக்கும், அஸ்ஸாமின் பூர்வீக மக்களான போடோ பழங்குடியினருக்கும் இடையே கடந்த ஆகஸ்ட் மாதம் கலவரம் ஏற்பட்டது. கடந்த செப்டம்பர் மாதம் வரை கலவரம் நீடித்ததில் 90 பேர் பலியாகினர், லட்சக்கணக்கானோர் வீடுகளை இழந்து முகாம்களில் தஞ்சம் அடைந்தனர். மத்திய போலீசார் வரவழைக்கப்பட்டு கலவரம் அடக்கப்பட்டது.
அஸ்ஸாமில் அமைதி திரும்பி மக்கள் சற்றே நிம்மதியாக இருந்து வந்த நிலையில் ஆகஸ்ட் மாத கலவரத்தால் பெரிதும் பாதிக்கப்பட்ட கோக்ரஜார் மாவட்டத்தில் நேற்று மீண்டும் வன்முறை வெடித்தது.
கொசைகாவ்ன் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட படுகாவ்ன் பகுதியில் நேற்று மதியம் 1.40 மணிக்கு ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டார். மேலும் பட்லன்மாரா என்ற கிராமத்தில் ஒரு வாலிபர் பயங்கர ஆயுதங்களால் தாக்கப்பட்டதில் பலியானார் என்று கூடுதல் எஸ்.பி. சுர்ஜித் சிங் தெரிவித்தார்.