சர்ச்சைக்குரிய ஸ்ரீரங்கம் 'பிராமணாள் கபே' இழுத்து மூடப்பட்டது!
திருச்சி: ஸ்ரீரங்கத்தில் சர்ச்சைக்குரிய பிராமணாள் கபேயை இழுத்து மூடுமாறு கட்டிட உரிமையாளர் உத்தரவிட்டதால் கடை காலி செய்யப்பட்டுவிட்டது.
ஸ்ரீரங்கத்தில் கிருஷ்ணய்யர் என்ற ஹோட்டலின் பெயர் பலகையில் 'பிராமணாள் கபே' என்று எழுதப்பட்டிருந்தது. இதற்கு எதிராக பெரியார் திராவிடர் கழகத்தினர் மறியல் போராட்டம் நடத்தி சிறைக்குப் போனார்கள். திராவிடர் விடுதலைக் கழகமும் போராட்ட எச்சரிக்கை அறிவிப்பு வெளியிட்டிருந்தது.
ஸ்ரீரங்கம் பிராமணாள் கபேக்கு எதிராக திருவானைக்காவலில் திராவிடர் கழகத்தின் சார்பில் பொதுக்கூட்டமும் நடத்தப்பட்டது. இதேபோல் பல்வேறு அமைப்புகளும் கடும் எதிர்ப்பு தெரிவித்து வந்தன.
ஆனால், இந்த ஹோட்டலுக்கு ஆதரவாக பிராமணர் சங்கமும் பாஜக உள்ளிட்டவையும் போராட்டம் நடத்தின. குறிப்பாக பாஜக முன்னாள் எம்எல்ஏ ராசா இது தொடர்பாக ஒரு பொதுக் கூட்டத்திலும் பேசினார். அப்போது திராவிடர் கழகத்தை மிகக் கடுமையாக சாடினார்.
இந்தக் கடைக்கு எதிர்ப்புத் தீவிரமானதால் தமிழக அரசு அந்த ஹோட்டலுக்கு போலீஸ் பாதுகாப்பை வழங்கி உதவியது.
இந் நிலையில் இந்த ஹோட்டலை பலரும் வெறுக்க ஆரம்பித்ததால், அதன் பக்கத்தில் இயங்கி வந்த கட்டிடத்தில் இருந்த லாட்ஜ் மற்றும் பக்கத்து கடைகளில் வியாபாரம் படுக்கத் தொடங்கிவிட்டது. இதனால் கடுப்பாகிப் போன கட்டிட உரிமையாளர் ஹோட்டலை காலி செய்ய சொல்ல இப்போது பிராமணாள் கபேக்கு மூடுவிழா நடத்தப்பட்டுவிட்டது.
ஆனாலும் நக்கீரன் வாரமிரு இதழுக்குப் பேட்டி கொடுத்திருக்கும் அந்தக் கடையின் உரிமையாளர் மணிகண்டன், நான் சொந்தமாக இடம் வாங்கி அந்த இடத்தில் ஹோட்டல் கட்டி பிராமணாள் கபேன்னு வைப்பேன் என்று கூறியிருக்கிறார்.
அடுத்து, 'ஸ்பெளண்டர் அய்யர்'
பிராமணாள் கபே சூடு முடிவதற்குள் ஹீரோ நிறுவனம் வெளியிட்ட புதிய ஸ்பெளண்டருக்கான அறிவிப்பில் 'ஸ்பெளண்டர் ஐயர்' என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இதுவும் சர்ச்சையை ஏற்படுத்த அந்த விளம்பரத்தை ஹீரோ நிறுவனம் உடனடியாக விலக்கிக் கொண்டுவிட்டது.