பந்த்தை எதிர்த்து கருத்து சொன்னா அரெஸ்டா?- கொந்தளித்த நீதிபதி கட்ஜூ
மும்பை: சிவசேனா தலைவர் பால்தாக்கரேவின் மறைவையொட்டி மும்பையில் முழு அடைப்பு நடத்தப்பட்டதை விமர்சித்த பெண்ணை மகாராஷ்டிரா போலீசார் கைது செய்ததற்கு பிரஸ் கவுன்சில் தலைவரும் உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதியுமான மார்க்கண்டே கட்ஜூ கடுமையாக எதிர்ப்புத் தெரிவித்திருக்கிறார். அந்த பெண்ணை விடுதலை செய்வதுடன் அவரை கைது செய்த போலீஸ் அதிகாரிகள் மீது உடனே கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக மகாராஷ்டிரா முதல்வருக்கு அவர் அனுப்பியுள்ள கடிதத்தில், மும்பை முழு அடைப்புக்கு எதிராக ஃபேஸ்புக்கில் பெண் ஒருவரை கருத்து தெரிவித்ததற்காக மத உணர்வுக்ளை புண்படுத்தியதாக கைது செய்திருப்பதாகக தகவல் கிடைத்திருக்கிறது. முழு அடைப்புக்கு எதிராக கருத்து சொல்வதை மத உணர்வுகளை புண்படுத்துவதாகக் கூறுவது ஏற்க முடியாது. அரசியல் சட்டம் 19-1ன் கீழ் இப்படி கருத்து தெரிவிக்க சுதந்திரம் இருக்கிறது. நாம் ஜனநாயக நாட்டில் வாழ்கிறோம்.. பாசிச சர்வாதிகார ஆட்சி இங்கு நடைபெறவில்லை. 341.342 ஆகிய பிரிவுகளின் கீழ் நீங்கள் கைது செய்திருந்தால் நிச்சயமாக முற்று முழுதான தவறுதான்.
இப்படியான ஒரு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டிருந்தால் அப்பெண்ணை கைது செய்ய உத்தரவிட்ட போலீஸ் மீது உடனடியாக சஸ்பெண்ட் அல்லது கைது அல்லது குற்றவியல் நடவடிக்கை- இதில் எது அதிகபட்சமோ அந்த நடவடிக்கையை மேற்கொண்டாக வேண்டும். இதை நீங்கள் செய்ய முடியாத நிலையில் அரசியல் சாசனப்படி.. ஒரு அரசை நடத்த தகுதியற்றவராகிறீர்கள்.. இதற்குரிய சட்டவிளைவுகளை எதிர்கொள்ள நேரிடும் என்று எச்சரித்திருக்கிறார்.












Click it and Unblock the Notifications