பாகிஸ்தானில் மீண்டும் ஒரு டிவி நிருபர் சுட்டுக் கொலை
இஸ்லாமாபாத்: பாகிஸ்தானில் மீண்டும் ஒரு டிவி நிருபர் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பாகிஸ்தானில் பத்திரிக்கையாளர்கள் மீது தாக்குதல் நடத்தப்படும் சம்பவம் அதிகரித்துள்ளது. பலுசிஸ்தான் மாகாணத்தில் உள்ள பஞ்ச்கர் மாவட்டத்தில் உள்ள வாஷ்பூட் பகுதியில் முடி திருத்துவதற்காக சென்ற துன்யா நியூஸ் சேனல் நிருபர் ரகமத்துல்லா அபித் மீது துப்பாக்கி சூடு நடைபெற்றுள்ளது.
நேற்று பிற்பகல் சலூன் கடைக்கு சென்ற போது அங்கு வந்த மர்ம கும்பல், திடீரென கடைக்குள் புகுந்து ரகமத்துல்லா மீது சரமாரியாக துப்பாக்கிச் சூடு நடத்தினர். இதில் அவர் ரத்த வெள்ளத்தில் சாய்ந்தார். உடனடியாக அவரை மருத்துவமனைக்கு தூக்கி சென்றனர். ஆனால் போகும் வழியிலேயே அவர் உயிரிழந்தார். பிரேத பரிசோதனைக்கு பின்னர் அவரது உடல், உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.
பலுசிஸ்தான் முதல்வர் அஸ்லம் ரெய்சானி, விசாரணை நடத்தி அறிக்கை சமர்ப்பிக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார். நிருபர் கொல்லப்பட்டதற்கு, பிரதமர் ராஜா பர்வேஸ் அஷ்ரப், குவெட்டா பிரஸ் கிளப் தலைவர் சலீம் ஷாகித், பலுசிஸ்தான் பத்திரிகையாளர் யூனியன் தலைவர் இஷா தரீன் ஆகியோர் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
நிருபர் படுகொலைக்கு இதுவரை எந்த தீவிரவாத அமைப்பும் பொறுப்பேற்கவில்லை. பலுசிஸ்தான் மாகாணம் குஸ்தார் நகரில் கடந்த செப்டம்பர் மாதம் ஏஆர்ஒய் நியூஸ் சேனல் நிருபர், பெஷாவரில் இதே நியூஸ் சேனல் ஊழியர் ஆகியோர் சுட்டுக் கொல்லப்பட்டார். இந்த நிலையில் இரு மாதங்களுக்குப்பின் மற்றொரு நிருபர் கொல்லப்பட்டிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
உலகம் முழுவதும் அநீதிக்கு எதிராக எழுதும் செய்தியாளர்கள் மீது தாக்குதல் நடத்தப்படுவதும், அவர்கள் கொல்லப்படுவதும் தொடர்கதையாகிவருகிறது. உலக அளவில் ஊடகத்துறையினருக்கு அபாயகரமான நாடாக மெக்சிகோவுக்கு அடுத்தபடியாக 2வது இடத்தில் பாகிஸ்தான் உள்ளது என்று யுனெஸ்கோ அறிவித்துள்ளது. கடந்த 92ம் ஆண்டு முதல் இதுவரை பாகிஸ்தானில் 40 பத்திரிகையாளர்கள் கொல்லப்பட்டதாக புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.