அதிகாலையில் இருந்து தூக்கு மேடை செல்லும் முன்பு கசாப் என்ன செய்தான்?
மும்பை தாக்குதல் வழக்கில் பாகிஸ்தான் தீவிரவாதியான கசாப் நேற்று காலை 7.30 மணிக்கு புனேவில் உள்ள ஏர்வாடா சிறையில் தூக்கிலிடப்பட்டான். நேற்று தன்னுடைய தூக்கு என்பதை தெரிந்த கசாப் காலையில் என்ன செய்தான் என்பதை அறிய பலரும் ஆர்வமாக உள்ளனர்.
இந்நிலையில் கசாப் நேற்று காலை என்னவெல்லாம் செய்தான் என்பது குறித்த தகவல் வெளியாகியுள்ளது. நேற்று தான் கடைசி நாள் என்பதை அறிந்த அவன் அதிகாலையிலேயே எழுந்துள்ளான். அதன் பிறகு குளித்துவிட்டு சிறை அதிகாரிகள் கொடுத்த புத்தாடையை அணிந்து தொழுதுள்ளான். பிறகு டீ குடித்துவிட்டு சிறை அதிகாரிகளைப் பார்த்து புன்னகை புரிந்துள்ளான்.
காலை 5.30 மணிக்கு சிறைத்துறை ஐஜி மீரான் பார்வன்கர் மற்றும் சிறை கண்காணிப்பாளர் யோகேஷ் தேசாய் கசாப் இருக்கும் இடத்திற்கு சென்றுள்ளனர். அதன் பிறகு மருத்துவப் பரிசோதனைக்காக அவனை சிறப்பு அறைக்கு அழைத்துச் சென்றுள்ளனர். அவனது எடை 52.5 கிலோவாக இருந்துள்ளது. அவன் பதட்டமாகக் காணப்பட்டபோதிலும் ரத்த அழுத்தம் சரியாக இருந்துள்ளது.
அதன் பிறகு ஒரு அறைக்கு அழைத்துச் சென்று அவனுடைய கடைசி ஆசை குறித்து கேட்டுள்ளனர். அதற்கு அவன் அப்படி எந்த ஆசையும் இல்லை என்று தெரிவித்துள்ளான். இதையடுத்து அவனை தூக்கு மேடைக்கு அழைத்துச் சென்று முகத்தில் துணியைப் போட்டுள்ளனர். பிறகு சரியாக காலை 7.30 மணிக்கு அவன் தூக்கிலிடப்பட்டான். பத்து நிமிடங்கள் கழித்து கசாப் இறந்ததாக அறிவிக்கப்பட்டது. 15 நிமிடங்கள் கழித்து கசாப் இறந்துவிட்டதாக மகாராஷ்டிரா உள்துறை அமைச்சர் ஆர்.ஆர். பாட்டீலிடம் போலீசார் தெரிவித்துள்ளனர்.
பின்னர் 9.30 மணிக்கு கசாபின் உடல் ஏர்வாடா சிறை வளாகத்திலேயே புதைக்கப்பட்டது. கசாபை புதைத்த இடத்தை ரகசியமாக வைக்க 6 குழி்கள் தோண்டப்பட்டுள்ளன.