கசாப் தூக்கிலிடப்பட்ட எரவாடா சிறையின் வரலாற்று பின்னணி...
6.8 ஹெக்டேரில் பரந்துவிரிந்து கிடக்கும் எரவாடா சிறைதான், மகாராஷ்டிராவின் மிகப் பெரிய சிறையாகும். இது 19-ம் நூற்றாண்டில் கட்டப்பட்டதாகும். இங்கு காந்தியின் மனைவி கஸ்தூரிபாய் காந்திக்கு தனி கோயிலும் இருக்கிறது.
புனே ஒப்பந்தம்
1930களில் தலித்துகளுக்கு தனித் தொகுதி முறையை அப்போதைய ஆங்கில அரசாங்கம் உருவாக்க முனைந்தது. இது இந்துக்களிடத்தில் பிளவு ஏற்படுத்தும் முயற்சி என்று கூறி எரவாடா சிறையில் அடைக்கப்பட்டிருந்த மகாத்மா காந்தி சாகும் வரை உண்ணாவிரதம் இருந்தார். லண்டன் வட்ட மேசை மாநாட்டில் போராடிப் பெற்ற தனித் தொகுதி முறையை காந்தி எதிர்க்க அம்பேத்கருக்கு இடியாப்பச் சிக்கலானது. ஆனால் அப்போது தந்தை பெரியாரோ, காந்தியாரின் ஒரு உயிரைவிட கோடிக்கணக்கான தாழ்த்தப்பட்ட மக்களின் உரிமை முக்கியமானது என்று கூறியதுடன் தனித் தொகுதி முறையில் அம்ப்தேகர் உறுதியாக இருக்க அறிவுறுத்தினார். ஆனால் காந்தியடிகளின் உயிரைக் காக்க வேறுவழியின்றி இதே எரவாடா சிறையில் அம்பேத்கர் தலித்துகளுக்கான தனித் தொகுதியை கைவிடுவதற்கான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டார். இதுவே வரலாற்று சிறப்புமிக்க புனே ஒப்பந்தம் எனப்படுகிறது. 1932ஆம் ஆண்டு செப்டம்பர் 24-ந் தேதி இந்த ஒப்பந்தம் கையெழுத்தானது.
இருவருக்கு தூக்கு
இந்திய ராணுவ தளபதி அருண்குமார் எஸ். வைத்யா கொலை வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட ஹர்ஜிந்தர் சிங் ஜிந்தா மற்றும் சுக்தேவ் சிங் சுகா ஆகியோர் 1992- ம் ஆண்டு இதே எரவாடா சிறையில்தான் தூக்கிலிடப்பட்டார்.
சஞ்சய் தத்
மும்பை குண்டுவெடிப்பு வழக்கில் கைது செய்யப்பட்ட பாலிவுட் நடிகர் சஞ்சய் தத்தும் இதே எரவாடா சிறையில்தான் அடைக்கப்பட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.