27 ஆண்டுகளுக்குப் பின்னர் இந்தியா திரும்பிய பால் ஜார்ஜ்: உயிரை காப்பாற்றிய வைகோவுக்கு நன்றி
சிவகாசி: துபாயில் மரணதண்டனை விதிக்கப்பட்டு பின்னர் அதிலிருந்து மீண்டு 27 ஆண்டுகாலத்திற்குப் பின் தமிழகம் திரும்பியுள்ள பால் ஜார்ஜ் நாடார், மதிமுக பொதுச்செயலாளர் வைகோவை கலிங்கபட்டியில் நேரில் சந்தித்து நன்றி தெரிவித்தார்.
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலைச் சேர்ந்தவர் பால் ஜார்ஜ் நாடார். கடந்த 1985-ம் ஆண்டு துபாயில் நடந்த தீவிபத்தில் 9 பேர் உயிரிழந்த வழக்கு தொடர்பாக இவரை துபாய் போலீஸ் கைது செய்து சிறையில் அடைந்தது.
சுமார் ஓராண்டு நடந்த இந்த வழக்கில் 1986-ம் ஆண்டு தீர்ப்பளித்த நீதிமன்றம், பால் ஜார்ஜ் நாடாருக்கு மரண தண்டனை விதித்து உத்தரவிட்டது. பின்னர் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினர் சமரசமாகி பால் ஜார்ஜ் நாடாரை மன்னித்துவிட்டதாக கூறி அவர்கள் கோர்ட்டில் கடிதம் கொடுத்தனர். எனினும் பால் ஜார்ஜ் நாடார் விடுவிக்கப்படாமல் துபாய் ஜெயிலில் தனி செல்சில் வைக்கப்பட்டிருந்தார்.
27 ஆண்டுகாலம் சிறையில் இருந்த பால் ஜார்ஜ் நாடார் கடந்த மாதம் விடுதலை செய்யப்பட்டு சொந்த ஊர் திரும்பினார். ஊருக்கு வந்த உடன் தன்னை மரண தண்டனையில் இருந்து காப்பாற்றியதாக மதிமுக பொதுச்செயலாளர் வைகோவிற்கு நன்றி தெரிவித்து கடிதம் எழுதியிருந்தார். இந்த நிலையில் இன்று கலிங்கப்பட்டிக்கு சென்ற பால் ஜார்ஜ் நாடர், வைகோவை நேரில் சந்தித்து நன்றி கூறியதோடு மதிமுகவின் வாழ்நாள் உறுப்பினராக தன்னை இணைத்துக்கொண்டார். இந்த நிகழ்ச்சியின் போது மாநில சட்டத்துறை செயலாளர் வெற்றிவேல் இணையதள ஒருங்கிணைப்பாளர் மின்னல் முகமது அலி ஆகியோர் உடனிருந்தனர்.