எஸ்.ஐ. ஆல்வின்சுதன் கொலைக் குற்றவாளிகள் பாரதி, பிரபு என்கவுன்ட்டரில் சுட்டுக் கொலை
மானாமதுரை: மானாமதுரை அருகே திருப்பாச்சேத்தி எஸ்.ஐ. ஆல்வின்சுதன் குத்திக் கொல்லப்பட்ட வழக்கின் பிரபு, பாரதி ஆகியோர் மானாமதுரை அருகே என்கவுன்டரில் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்த போலீசார் 21 பேரை கைது செய்தனர். இந்த கொலை சம்பவத்தில் முக்கிய குற்றவாளிகளான பிரபு, மணிகண்டன், முத்துக்குமார் ஆகியோர் கடந்த சில வாரங்களுக்கு முன்பு திருப்பூர் கோர்ட்டில் சரணடைந்தனர். அவர்கள் அனைவரும் மதுரை சிறையில் அடைக்கப்பட்டிருந்தனர். இதில் பிரபு, பாரதி ஆகியோர் மீது 30க்கும் மேற்பட்ட வழக்குகள் உள்ளன.
இதைத் தொடர்ந்து மானாமதுரை டி.எஸ்.பி கருணாநிதி மாற்றப்பட்டு 'என்கவுன்ட்டர்' புகழ் வெள்ளத்துரை நியமிக்கப்பட்டார். ஆல்வின்சுதன் கொலையில் உள்ளூர் ரவுடிகளுக்கு தொடர்பிருப்பது தெரியவந்தது. ஆனால் உள்ளூர் ரவுடிகளை உள்ளூர் போலீசார்தான் காப்பாற்றி வருவதால் சில நாட்களுக்கு முன்பு 15க்கும் மேற்பட்ட போலீசாரை மானாமதுரை பகுதியில் இருந்து வெள்ளத்துரை இடமாற்றம் செய்து உத்தரவிட்டிருந்தார்.
இந்நிலையில் வழக்கு விசாரணைக்காக மதுரை சிறையில் இருந்து சிவகங்கை செசன்ஸ் நீதிமன்றத்திற்கு இவர்கள் இருவரையும் நேற்று போலீசார் அழைத்து வந்தனர். மதுரை அண்ணா நகர் அருகே வரும் போது பிரபு, பாரதி ஆகிய இருவரும் போலீசாரை தாக்கி விட்டு தப்பி ஓடிவிட்டதாக கூறப்படுகிறது.
தப்பியோடிய குற்றவாளிகளை டி.எஸ்.பிக்கள் வெள்ளைத்துரை, மங்களேஸ்வரன் தலைமையிலான போலீசார் தேடி வந்தனர். இந்த நிலையில் மானாமதுரை அருகே தீர்த்தான்பேட்டை எல்லை அருகே இருசக்கர வாகனத்தில் சென்ற பிரபு, பாரதி ஆகியோரை போலீசார் பிடிக்க முயன்ற போது பெட்ரோல் குண்டை வீசியும், அரிவாளைக் கொண்டும் போலீசாரை தாக்க முயன்றதாக கூறப்படுகிறது. இதில் டி.எஸ்.பி. வெள்ளைத்துரை திருப்பி சுட்டதில் பிரபு சம்பவ இடத்திலேயே பலியானான். பாரதியை மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தான்.
இந்த என்கவுண்டர் சம்பவம் குறித்து கருத்து கூறிய டிஐஜி ராமசுப்பிரமணியன், காலையில் தப்ப முயன்ற ரவுடிகளை போலீசார் பிடிக்க முயன்ற போது அவர்கள் தாக்கியுள்ளனர். இதில் எஸ்.ஐ. பூமிநாதன், போலீசார் தினேஸ்குமார், மாரிமுத்து ஆகிய மூவரும் காயமடைந்தனர். தற்காப்புக்காக போலீசார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் ரவுடிகள் இருவரும் பலியானார்கள் என்றார்.
எஸ்.ஐ. கொலைக்குற்றவாளிகள் மீது போலீசார் நடத்திய என்கவுன்டர் மானாமதுரை பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.