தேசியத் தலைவர்களை பிறப்பித்த தமிழக சட்டசபை: வைரவிழாவில் குடியரசுத் தலைவர் பிரணாப் புகழாரம்
குஜ்ரால் மறைவுக்கு இரங்கல்
சென்னையில் இன்று தமிழக சட்டப்பேரவை வைரவிழா நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியின் தொடக்கத்தில் தமிழக முதல்வர் ஜெயலலிதா, முன்னாள் பிரதமர் ஐ.கே. குஜ்ரால் மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கும் வகையில் ஒரு நிமிடம் மவுனம் கடைபிடிக்குமாறு கேட்டுக்கொண்டார். இதையடுத்து அனைவரும் எழுந்து நின்று முனனாள் பிரதமர் குஜ்ரால் மறைவுக்கு அஞ்சலி செலுத்தினர்.
அடிக்கல் நாட்டு விழா
பின்னர் முதல்வர் ஜெயலலிதா சட்டசபை வைரவிழா மலரை வெளியிட, பிரணாப் முகர்ஜி மற்றும் ரோசய்யா பெற்றுக்கொண்டனர். தொடர்ந்து சட்டசபை முன்னாள் உறுப்பினர்கள் விடுதிக்கு பிரணாப் முகர்ஜி அடிக்கல் நாட்டினார்.
பிரணாப் புகழாரம்
இந்நிகழ்வில் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி சிறப்புரையாற்றுகையில், இந்தியாவிலேயே முதல் முறையாக விற்பனை வரியை 1937-ல் கொண்டுவந்தது தமிழக சட்ட சபைதான். தமிழக சட்டசபையில் பணியாற்றிய பலர் தேசிய தலைவர்களாக உருவெடுத்திருக்கின்றனர். டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி சத்தியமூர்த்தி போன்றவர்கள் இந்த சபையில் பணியாற்றியிருக்கின்றனர். சஞ்சீவ ரெட்டி, சி.சுப்பிரமணியம் போன்றோர் பணியாற்றிய பெருமை தமிழக சட்ட சபைக்கு உண்டு. சென்னை மாகாணத்துக்கு தமிழகம் என்று சட்டசபையில் பெயர் சூட்டினார் அண்ணா. 1957-ம் ஆண்டு தமிழக சட்டசபை உறுப்பினராக இருக்கும் பெருமை முன்னாள் முதல்வர் கருணாநிதிக்கு இருக்கிறது.இதேபோல் ஆதிதிராவிடர்- பிற்படுத்தப்பட்டோருக்கு இடஒதுக்கீடு கொண்டு வந்தது தமிழக சட்டசபைதான் என்றார் பிரணாப் முகர்ஜி.
முன்னதாக தமிழக முதல்வர் ஜெயலலிதா பேசுகையில், வரலாற்று சிறப்பு மிக்க தீர்மானங்கள் தமிழக சட்டசபையில் நிறைவேற்றப்பட்டுள்ளன. சட்டசபை வைரவிழா கொண்டாட்டங்கள் வரலாற்றில் இடம்பெறும் என்றார்.
மூத்த உறுப்பினர்கள் சிறப்பிப்பு
இந்நிகழ்வில் பட்டுக்கோட்டையிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட முன்னாள் உறுப்பினர் கிருஷ்ணசாமி கோபாலன், பொள்ளாச்சி தொகுதியிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர் என். மகாலிங்கம் மற்றும் புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் தொகுதியிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர் ஆர்.எம். பழனியப்பன் ஆகியோர் சிறப்பிக்கப்பட்டனர்.
சட்டசபையின் வைரவிழாவை முன்னிட்டு, தலைமைச்செயலகம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகள் வண்ண அலங்கார விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளது.