பெங்களூரில் மிகப் பெரிய அலுவலகம் கட்டும் விப்ரோ நிறுவனம்
பொருளாதார மந்தநிலை காரணமாக நிறுவனங்கள் ரியல் எஸ்டேட்டில் முதலீடு செய்யத் தயங்கும் வேளையில் ஐடி நிறுவனமான விப்ரோ பெங்களூரில் 30,000 பேர் பணியாற்றக் கூடிய வகையில் மிகப்பெரிய அலுவலகத்தை கட்டத் திட்டமிட்டுள்ளது. பெங்களூர் சர்ஜாபூரில் உள்ள விப்ரோ நிறுவனம் 1.9 மில்லியன் சதுர அடியில் கட்டப்பட்டதாகும்.
ஆனால் புதிய அலுவலகம் சர்ஜாபூர் அலுவலகத்தில் இருந்து 4 கிமீ தொலைவில் 50 ஏக்கர் பரப்பில் 2.5 மில்லியன் சதுர அடியில் கட்டப்படுகிறது. இந்த புதிய கட்டிடத்தில் 30,000 பேர் பணியாற்றலாம். தற்போதுள்ள விப்ரோ நிறுவன ஊழியர்களின் எண்ணிக்கை 138,000 ஆகும்.
முன்னதாக விப்ரோ நிறுவனம் புதிய அலுவலகம் கட்டத் திட்டமிட்டது நில அங்கீகாரம் பெறும் விவகாரத்தால் நிலுவையில் இருந்தது. தற்போது அங்கீகாரம் கிடைத்துள்ளதையடுத்து அடுத்தக் கட்ட பணிகளைத் துவங்கியுள்ளது. கடந்த நிதியாண்டில் 13,000 பேரை பணியமர்த்திய விப்ரோ இந்த ஆண்டு குறைவான பேரையே வேலைக்கு எடுத்துள்ளது.
விப்ரோவைப் போன்று டாடா கன்சல்டன்சி சர்வீசஸ்(டிசிஎஸ்) நிறுவனமும் இந்தூரில் 1.5 மில்லியன் சதுர அடியில் புதிய அலுவலகத்தை கட்டவிருப்பதாக அறிவித்துள்ளது.