குஜராத் பாதுகாப்பான மாநிலம் என்று சொல்லவில்லை- மோடிக்கு பேஸ்புக் பெண்ணின் தந்தை மறுப்பு
நாக்பூர்: மகாராஷ்டிராவை விட குஜராத் மிகவும் பாதுகாப்பானது என்று தனது மகள் கூறவே இல்லை என்று கூறியுள்ளார் பாருக் தாதா.
இவர் ஷாஹீன் தாதாவின் தந்தை ஆவார். மகாராஷ்டிராவைச் சேர்ந்த ஷாஹீன் தாதா, சிவசேனா தலைவர் பால் தாக்கரே மரணம் குறித்து பேஸ்புக்கில் கருத்து எழுதி கைதாகி பெரும் சர்ச்சையைக் கிளப்பியவர் ஆவார். ஷாஹீனின் கருத்தால் கோபமடைந்த சிவசேனா தொண்டர்கள் அவரது உறவினரின் மருத்துவமனையை அடித்து நொறுக்கி விட்டனர்.
இந்த நிலையில் குஜராத்தில் போய் ஷாஹீன் செட்டிலாகப் போவதாக தகவல்கள் வெளியாகின. மேலும் சட்டம் ஒழுங்கைப் பொறுத்தவரையில் மகாராஷ்டிராவை விட குஜராத் மிகவும் பாதுகாப்பானதாக இருப்பதாக ஷாஹீன் கூறியதாகவும் தகவல்கள் வெளியாகின. ஆனால் அதை அவரது தந்தை பாரூக் தாதா மறுத்துள்ளார்.
இதுகுறித்து அவர் கூறுகையில், நாங்கள் தானே நகரில், பால்கர் பகுதியில்தான் பல வருடமாக வசித்து வருகிறோம். அங்கு எங்களுக்கு எந்தப் பிரச்சினையும் ஏற்பட்டதில்லை. மிக மிக பாதுகாப்பாகத்தான் இருந்து வருகிறோம்.
நானும் சரி, எனது மகளும் சரி, குடும்பத்தினரும் சரி மகாராஷ்டிராவை விட குஜராத்தில் சட்டம் ஒழுங்கு நன்றாக இருப்பதாக ஒருபோதும் சொன்னதில்லை. இதுகுறித்து எனது மகள் கூறியதாக குஜராத் முதல்வர் நரேந்திர மோடி டிவிட்டரில் தெரிவித்திருப்பது தவறான தகவல். நாங்கள் அப்படி ஒருபோதும் சொன்னதில்லை.
நாங்கள் சமீபத்தில் குஜராத்துக்குப் போனது கூட, எனது உடல் நலம் சரியில்லாமல் இருக்கும் மாமியாரைப் பார்க்கத்தான். தற்போது மீண்டும் பால்கருக்கு வந்து விட்டோம். இங்கிருந்து நாங்கள் எங்கும் போகும் திட்டத்தில் இல்லை என்றார் அவர்.
சமீ்பத்தில் தேர்தல் பிரசாரத்தின்போது நரேந்திர மோடி பேசுகையில், குஜராத்தில் சிறுபான்மையினத்தவர்கள் பாதுகாப்பு உணர்வின்றி இருப்பதாக பிரதமர் கூறுகிறார். ஆனால் ஷாஹீன் போன்ற பெண்கள் மகாராஷ்டிராவை விட குஜராத் பாதுகாப்பாக இருப்பதாக உணர்ந்து இங்கு வருகிறார்கள். இதுதான் உணமை நிலை என்று கூறியிருந்தார். இந்த்க கருத்தை மறுத்துத்தான் தற்போது ஷாஹீனின் தந்தை பேசியுள்ளார்.