இந்தியா கேட் அருகே போர் நினைவகம்?: மத்திய அரசுக்கு ஷீலா தீட்சித் எதிர்ப்பு
டெல்லியின் அடையாளங்களும் ஒன்றாக இருக்கிறது இந்தியா கேட். இது முதலாவது உலகப் போர் மற்றும் ஆங்கிலோ-ஆப்கன் போரில் உயிரிழந்த 90 ஆயிரம் இந்திய வீரர்களின் நினைவாக ஆங்கிலேயர் ஆட்சியில் அமைக்கப்பட்டது. இதன் அருகே நாட்டின் பல போர்களிலும், ஜம்மு காஷ்மீர் மற்றும் வடகிழக்கு மாநில மோதல்களிலும் உயிரிழந்த ராணுவத்தினருக்கு மரியாதை செய்யும் வகையில் தேசிய போர் நினைவகம் ஒன்றை அமைக்க மத்திய அரசு திட்டமிட்டது.
இதற்காக பிரணாப் முகர்ஜி தலைமையில் 2009-ம் ஆண்டு அமைச்சர்கள் குழு ஒன்றும் அமைக்கப்பட்டது. பிரணாப் தற்போது குடியரசுத் தலைவராகிவிட்டார். இந்நிலையில் கடந்த ஆகஸ்ட் மாதம் பாதுகாப்புத் துறை அமைச்சர் ஏ.கே. அந்தோணி தலைமையில் கூடிய அமைச்சர்கள் குழு இந்தியா கேட் அருகே தேசிய போர் நினைவகம் அமைக்க மத்திய அரசுக்கு பரிந்துரைத்திருந்தது. இது தொடர்பாக மத்திய அமைச்சரவை இன்னும் ஒப்புதல் வழங்கவில்லை.,
இந்நிலையில் இந்த போர் நினைவகத்தை இந்தியா கேட் பகுதியில் அமைக்க காங்கிரஸ் ஆளும் டெல்லி மாநில முதல்வர் ஷீலா தீட்சித் கடும் எதிர்ப்புத் தெரிவித்திருக்கிறார்.
இந்தியா கேட் பகுதிக்கு பொதுமக்கள் எளிதாக வந்து செல்கின்றனர். ஆனால் தேசிய முக்கியத்துவம் வாய்ந்த போர் நினைவகம் அங்கு அமைத்தால் பாதுகாப்பு காரணங்களுக்காக பொதுமக்களின் நடமாட்டத்துக்கு பாதிப்பு ஏற்படும். அதனால் போர் நினைவகத்தை அங்கு அமைக்கக் கூடாது என்பது ஷீலா தீட்சித்தின் கருத்து.
ஆனால் இந்தியா கேட் பகுதிதான் போர் நினைவகம் அமைக்க சரியான இடம் என்று பாதுகாப்புத் துறை அமைச்சர் ஏ.கே. அந்தோணி கூறியிருக்கிறார்.
காங்கிரஸ் தலைமையிலான மத்திய அரசின் முடிவுக்கு காங்கிரஸ் கட்சி ஆளும் மாநில முதல்வரே கடும் எதிர்ப்புத் தெரிவித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.