இடஒதுக்கீடு மசோதாவை நாராயணசாமியின் கையில் இருந்து பறித்து, கிழித்த எஸ்.பி. எம்.பி.க்கள்
வேலைவாய்ப்பில் பிற்படுத்தப்பட்டோருக்கு இடஒதுக்கீடு வழங்கும் மசோதா சமாஜ்வாடி கட்சியின் எதிர்ப்பையும் மீறி ராஜ்யசபாவில் நிறைவேற்றப்பட்டது. தற்போது லோக்சபாவில் அம்மோசாதாவை நிறைவேற்றும் முயற்சியில் மத்திய அரசு இறங்கியுள்ளது. இதற்கு முலாயம் சிங் யாதவின் சமாஜ்வாடி கட்சி எம்.பி.க்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் இன்று பிற்பகல் மத்திய அமைச்சர் நாராயணசாமி மசோதாவை வாசித்துக் கொண்டிருந்தார். அப்போது சமாஜ்வாடி கட்சி எம்.பி.க்கள் அவைக்கு நடுவே சென்று அமளியில் ஈடுபட்டனர். இதற்கிடையே சமாஜ்வாடி கட்சி எம்.பி. யஷ்விர் சிங் நாராயணசாமி கையில் இருந்த மசோதாவை பறித்துச் சென்றார். இதைப் பார்த்த காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி மசோதாவை யஷ்வீர் சிங் கையில் இருந்து வாங்க முயன்றார். ஆனால் அதற்குள் அவர் கையில் இருந்த மசோதாவை வாங்கி சமாஜ்வாடி கட்சியைச் சேர்ந்த இன்னொரு எம்.பி.யான நீரஜ் சேகர் கிழித்துப் போட்டுவிட்டார்.
இதையடுத்து ஏற்பட்ட அமளியால் சபாநாயகர் மீரா குமார் அவையை நாள் முழுவதும் ஒத்தி வைத்தார்.