கடையநல்லூர் நகராட்சியில் செருப்பை கழற்றி மோதிய கவுன்சிலர்கள்
கடையநல்லூர் நகராட்சி கூட்டம் தலைவர் சைபுன்னிசா தலைமையில் நடந்தது. துணை தலைவர் ராசையா, நகராட்சி கமிஷனர் (பொறுப்பு) ராமலிங்கம் மற்றும் கவுன்சிலர்கள் கலந்து கொண்டனர். கூட்டம் துவங்குவதற்கு முன்பாகவே பெண், ஆண் கவுன்சிலர்கள் சிலர் காலை 10.30 மணிக்கு கூட்டம் நடைபெறுவதாக தெரிவித்தும் ஆவேசத்துடன் நகராட்சி அலுவலக வளாகத்தில் பேசிய வண்ணம் இருந்தனர். கூட்டத்தை உடனடியாக துவக்கவில்லை என்றால் திரும்பிச் செல்வதாகவும் அவர்கள் தெரிவித்தனர். இதனையடுத்து கூட்டம் துவங்குவதற்கான ஏற்பாடு செய்யப்பட்டது. கூட்டத்தில் அஜண்டா வாசிக்கப்படுவதற்கு முன்பாகவே கடுமையான களேபரம் காணப்பட்டது.
கூட்டம் துவங்கியதும் கவுன்சிலர் ராஜ், 'நகராட்சி கூட்டம் 10.30 மணிக்கு என்று அறிவித்துவிட்டு 45 நிமிடங்களுக்கு பின் நடத்துகிறீர்களே. அப்படி என்றால் எதற்கு நேரத்தை குறிப்பிடுகிறீர்கள்' என கேட்டார். இதற்கு பதிலளித்த தலைவர், இன்னும் சில கவுன்சிலர்கள் வர வேண்டி இருந்தது என்றார்.
நகராட்சி பகுதியில் சுகாதாரக் கேடு காணப்படுகிறது. பொதுமக்கள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர் என தெரிவித்த கவுன்சிலர்கள் ராஜ், முத்துகிருஷ்ணன், முத்தையா பாண்டி, பாலாஜி, காளிரத்தினம், மாரிமுத்து, திவான், பியூலா, ஆறுமுகம், மகேஷ்வரி, சக்திமாரி, பூமாரியம்மாள் ஆகியோர் தங்களது வார்டுகளில் சுகாதாரக் கேடு தொடர்பாக எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என தெரிவித்து தரையில் அமர்ந்து கோஷமிட்டபடி இருந்தனர்.
இதனைத் தொடர்ந்து நகராட்சி தலைவி சைபுன்னிசா, சுகாதாரக் கேடு குறித்து உரிய விளக்கம் அளிக்குமாறு சுகாதார ஆய்வாளர்களை கேட்டுக் கொண்டார். கடையநல்லூர் கூட்டரங்கில் வீரன் சுந்தரலிங்கனார் படத்தை பெரிய அளவில் வைக்க வேண்டும் என பலமுறை மனுக்கள் கொடுத்தும் அதற்கான ஏற்பாடு செய்யப்படவில்லை என கவுன்சிலர் ராஜ் தெரிவித்தார்.
அதற்கு தலைவர் சைபுன்னிசா கூறுகையில், வீரன் சுந்தரலிங்கனார் படத்தை யாராவது அன்பளிப்பாக கொடுத்தால் வைப்பதற்கு அனுமதி வழங்கப்படும். இதில் எந்தவித மாற்றுக் கருத்தும் கிடையாது. படத்தை பெரிதாக தயார் செய்து கொண்டு வாருங்கள். நிர்வாக அனுமதி பெறுவதற்கு ஏற்பாடு செய்யப்படும் என்றார்.
இதற்கிடையே அனைத்து தரப்பு தலைவர்களின் படங்களும் அடித்து நொறுக்கப்படும் என்று கவுன்சிலர் ராஜ் பேசியதற்கு, கவுன்சிலர்கள் முத்துகுமார், விஸ்வா, சுல்தான் உட்பட பலர் எதிர்ப்பு தெரிவித்தனர். இந்நிலையில் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த கவுன்சிலர் பியூலாவிற்கும், கவுன்சிலர் ராஜுக்கும் படம் தொடர்பாக காரசார விவாதம் நடந்தது. இரண்டு பேரும் ஒருவருக்கொருவர் காலில் கிடந்த செருப்பை தூக்கி காட்டியபடி வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
கவுன்சிலர்களின் ஆவேச பேச்சினை அடுத்து உடனடியாக போலீசிற்கு தகவல் தெரிவிக்கும்படி நகராட்சி தலைவி சைபுன்னிசா அதிகாரிகளை கேட்டுக் கொண்டார். வாக்குவாதத்தில் ஈடுபட்டிருந்த ராஜ் மற்றும் பியூலாவை கவுன்சிலர்கள் சிலர் சமாதானப்படுத்தினர். இதனையடுத்து கூட்டத்தில் அஜண்டா வாசிக்கப்பட்ட நிலையில் கவுன்சிலர்கள் சிலர் தங்களது வார்டுகளில் உள்ள பிரச்சனைகள் தொடர்பாக பேசினர்.
இந்த சம்பவத்தால் கடையநல்லாரில் பரபரப்பு ஏற்பட்டது.