கர்நாடகத்தில் இளம் பெண்ணை 9 நாட்கள் பலாத்காரம் செய்த 7 பேர் கைது; மேலும் 4 பேருக்கு வலை
ஹாசன்: கர்நாடகத்தில் இளம் தலித் பெண்ணை 9 நாட்கள் தொடர்ந்து பாலியல் பலாத்காரம் செய்த 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் 4 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.
ஹாசன் மாவட்டம் ஆலூரைச் சேர்ந்த 15 வயதான தலித் பெண்ணுக்கு துணிக் கடையில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி அவரது உறவினரான புட்டா என்பவன் கடந்த 19ம் தேதி அழைத்துச் சென்றார். அவனும் அவனது நண்பனான ராஜா என்பவனும் அந்தப் பெண்ணை கட்டாயா ஹோப்ளி என்ற இடத்தில் ஒரு காட்டுப் பகுதியில் வைத்து பலாத்காரம் செய்துள்ளனர். பின்னர் அந்தப் பெண்ணை ஹாசன் பஸ் நிலையத்தில் விட்டுவிட்டுச் சென்றுவிட்டனர்.
அழுதபடியே அருகே இருந்த மொபைல்போன் கடையில் தனது போனை ரீசார்ஜ் செய்யச் சென்ற அந்தப் பெண்ணிடம் கடைக்கார வாலிபனான தயானந்த் என்பவன் விவரம் கேட்டுள்ளான். தனக்கு நேர்ந்த கொடுமையை அவனிடம் அந்தப் பெண் கூறியதும், தனது நண்பர்களான மது, திலீப், சின்னு, மோகன், சேகர் ஆகிய 5 பேரை வரவழைத்துள்ளான்.
உனக்கு உதவி செய்கிறோம் என்று கூறி இந்த 6 பேரும் அந்தப் பெண்ணை சினிமா தியேட்டருக்கும், பின்னர் லாட்ஜுக்கும் கொண்டு சென்று பல நாட்கள் வைத்திருந்து கற்பழித்துள்ளனர்.
அவர்களிடம் இருந்து ஒரு வழியாகத் தப்பித்த அந்தப் பெண் ஒரு பெண்கள் அமைப்பை நாடி தனக்கு நேர்ந்த கொடுமையை விளக்கியுள்ளார். இதையடுத்து போலீசாருக்கு தகவல் தரப்பட்டது.
3 தனிப்படை போலீசார் குற்றவாளிகள் 7 பேரையும் கைது செய்துள்ளனர். இதில் 2 பேர் கல்லூரி மாணவர்கள், 3 பேர் ஆட்டோ டிரைவர்கள். இவர்கள் அனைவருமே 18 முதல் 25 வயதுக்கு உட்பட்டவர்கள்.
இதில் தொடர்புடைய ராஜா உள்ளிட்ட 4 பேரும் விரைவில் கைது செய்யப்படுவார்கள் என்று மாவட்ட எஸ்.பி. அமித் சிங் கூறியுள்ளார்.
இந்தப் பெண்ணுக்கும் கைது செய்யப்பட்ட நபர்களுக்கும் மருத்துவ பரிசோதனை நடத்தப்படவுள்ளது.
குற்றவாளிகள் அனைவருக்கும் மிகக் கடுமையான, மற்ற குற்றவாளிகளுக்கு ஒரு உதாரணமாக இருக்கும் வகையிலான தண்டனை வழங்க வேண்டும் என்று முன்னாள் முதல்வரும் ஹாசன் தொகுதி எம்.பியுமான தேவ கெளடா கோரிக்கை விடுத்துள்ளார்.