பாலியல் பலாத்காரம்: மாணவி உயிரிழப்பு- ஜனாதிபதி, பிரதமர், கருணாநிதி இரங்கல்
டெல்லி: பாலியல் பலாத்கார சம்பவத்தில் பாதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி சிங்கப்பூரில் உயிரிழந்த மாணவியின் மரணத்துக்கு குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி, பிரதமர் மன்மோகன்சிங் ஆகியோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
குடியரசுத் தலைவர் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், தனது உயிருக்காகவும் கவுரவத்துக்காகவும் கடைசி நிமிடம் வரை தன்னம்பிக்கையுடனும், தைரியத்துடனும் அந்த மாணவி போராடினார். இந்தியாவின் வலிமை மிக்க இளைய சமுதாயத்தின் அடையாளமாக, உண்மையான முன்மாதிரியாக திகழ்ந்த இந்தியாவின் வீரமகளை இழந்த இந்த நாடு துயரப்படுகின்றது. துரதிர்ஷ்டவசமாக அவரை இழந்து துயரப்படும் குடும்பத்தினர் இந்த இழப்பை தாங்கும் வலிமையை பெற பிரார்த்திக்கின்றேன். அதே வேளையில், அவரது மரணம் வீணாகிப் போகும் என்ற முடிவுக்கு நாம் வந்து விடக்கூடாது. இதை போன்ற சம்பவம், இனி எப்போதுமே ஏற்படாது என்ற பாதுகாப்பை தருவதற்கு தேவையான அனைத்தையும் நாம் செய்வோம் என்று கூறியுள்ளார்.
பிரதமர் மன்மோகன்சிங் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், இந்தத் தருணத்தில் உணர்வுகளை ஒருமுகப்படுத்தி ஆக்கப்பூர்வமான செயலில் ஈடுபடுவதுதான் அந்த மாண்விக்கு நாம் செலுத்தும் அஞ்சலியாகும். பாலியல் பலாத்காரம் போன்ற சம்பவங்களில் ஈடுபடுவோருக்கு கடும் தண்டனை கொடுப்பது பற்றி அரசு ஆலோசித்து வருகிறது. அனைத்து அரசியல் கட்சிகளும் பொதுமக்களும் பெண்களின் பாதுகாப்புக்கான அரசின் நடவடிக்கைகளுக்கு ஒத்துழைக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளார்.
திமுக தலைவர் கருணாநிதி வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், மருத்துவக் கல்லூரியில் படித்து வரும் மாணவி டெல்லியில் பாலியல் வன்முறைக்கு ஆளாகி சிங்கப்பூரில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டு அங்கே மரணமடைந்த செய்தி கேட்டு அதிர்ச்சியும் ஆழ்ந்த கவலையும் அடைந்தேன்.
ஏதோ ஒரு இடத்தில் மாத்திரமன்றி இந்தியாவில், குறிப்பாக தமிழ்நாட்டில் அண்மைக் காலமாக இத்தகைய கொடுமையான பாலியல் வன்முறைக்கு மாணவிகளும் ஏழைப் பெண்களும் உள்ளாக்கப்படும் செய்தி தொடர்ந்து வந்து கொண்டிருக்கின்றன. இத்தகைய செயல்களில் ஈடுபடும் கொடியவர்களுக்குக் கடுமையான தண்டனை என்பது அவர்களை ஆயுள் முழுவதும் தனிமைச் சிறையில் அடைத்து வைக்க வேண்டும் என்பதுதான். இதுபற்றி மத்திய, மாநில அரசுகள் உறுதியான முடிவு எடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன் என்று கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications