சொந்த ஊரான பீகாருக்கு வந்து அழுத மொரீசியஸ் அதிபர்

ராஜ்கேஸ்வர் பூர்யாகின் முன்னோர்கள் 150 ஆண்டுகளுக்கு முன் பீகாரின் பாட்னா மாவட்டத்தில் இருந்து வெள்ளைக்கார ஆட்சியாளர்களால் ஒப்பந்தத் தொழிலாளர்களாக மொரீசியஸ் நாட்டிற்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.
பாட்னா மாவட்டத்தில் வஜித்பூர் கிராமம்தான் அவர்களின் சொந்த ஊராகும். இந்நிலையில், இந்தியா வந்துள்ள மொரீசியஸ் அதிபர் ராஜ்கேஸ்வர் பூர்யாக் தனது சொந்த கிராமத்துக்கு மனைவி அனிதாவுடன் ஞாயிற்றுக்கிழமை வருகை புரிந்தார். அவரை அக்கிராம மக்கள் திரண்டு வந்து உற்சாகத்துடன் வரவேற்றனர். அவர்களிடையே பேசிய ராஜ்கேஸ்வர் பூர்யாக், ஆனந்த கண்ணீர் விட்டு அழுதார்.
பின்னர் தனது பூர்வீக கிராம மக்களிடையே அவர் பேசியதாவது:
நாங்கள் பீகார் வம்சாவளியைச் சேர்ந்தவர்கள் என்பதில் பெருமிதமடைகிறோம். நானும் மொரீசியஸ் மக்களும் இந்தியா மற்றும் பீகாருடனான உறவை எப்போதும் நினைவில்வைத்துள்ளோம்.
எனது பூர்வீக கிராமத்திற்கு வந்ததை எண்ணி நான் பேரின்பம் அடைகின்றேன். மொரீசியஸ் எனது முதல் வீடு. பீகார் எனக்கு இரண்டாவது வீடு. இந்த கிராமத்திற்கு வந்ததை எண்ணி நான் மிகவும் உணர்ச்சிவசப்பட்டவனாக, மகிழ்ச்சி அடைந்துள்ளேன். நமது உறவு இருநாடுகளுக்கு இடையிலான உறவு அல்ல; இரு சகோதரர்களுக்கு இடையிலான உறவைப் போன்றது நம் உறவு. இவ்வாறு கூறிய அவர், உணர்ச்சிவசப்பட்டு, கண்ணீர் வடித்தார்.
ஆங்கிலேயர்கள், எனது முன்னோர்களை நல்ல வேலை வாங்கித் தருவதாக ஆசை காட்டி மொரீசியஸ் அழைத்துச் சென்றனர். ஆனால், அங்கு அவர்கள் சென்றபோது வெறும் கல்லும் மண்ணுமாகக் காட்சியளித்தது. அங்கு வறுமை தாண்டவாடியது. சாப்பிட ஏதுமில்லை. அவர்கள் கடுமையாக உழைத்து, நவீனமான வளர்ச்சியடைந்த மொரீசியஸை உருவாக்கினர்.
மகாத்மா காந்தி 20ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் மொரீசியஸில் சில நாள்கள் பயணம் மேற்கொண்டார். அங்கு ஒப்பந்தத் தொழிலாளர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தாரின் துன்பங்களைக் கண்டு வேதனையடைந்தார். அப்போது, அவர்களின் குழந்தைகளுக்கு கல்வியை வழங்கும்படி காந்திஜி வலியுறுத்தினார் என்றார் ராஜ்கேஸ்வர் பூர்யாக்.
எனது முன்னோர்களின் கிராமத்தைக் கண்டறிவதற்காக நான் 25 ஆண்டுகளுக்கு முன் பிகாருக்கு வந்தேன். பாட்னாவில் மூன்று நாள்கள் தங்கியிருந்தபோதும் அந்த முயற்சி தோல்வியடைந்தது. இப்போது எனது சொந்த கிராமத்தைக் கண்டறிய உதவிய முதல்வர் நிதீஷுக்கு நன்றி.
பிகாரில் வளர்ச்சியை ஏற்படுத்தி, மாநிலம் குறித்தும் மக்கள் குறித்தும் நிலவிய எதிர்மறையான கருத்தை மாற்றியவர் அவர். இப்போது பிகார் மற்றும் அதன் வளர்ச்சி குறித்து இந்தியாவின் மற்ற பகுதிகள் மட்டுமின்றி உலகெங்கும் பேசப்படுகிறது. நான் மீண்டும் இங்கு வருவேன் என்றும் ராஜ்கேஸ்வர் கூறினார்
அவரைக் கௌரவிக்கும் விதமாக வஜித்பூர் கிராமத்தில் உயர்நிலைப் பள்ளி ஒன்றை அமைப்பதற்கு அடிக்கல் நாட்டப்பட்டது. இவ்விழாவில் ராஜ்கேஸ்வர் பூர்யாக்குடன் முதல்வர் நிதீஷ்குமார் மற்றும் அமைச்சர்கள் கலந்து கொண்டனர்.
தனது தூரத்து உறவினர்கள் இருவரை சந்தித்து, சிறிது நேரம் பேசிய மொரீசியஸ் அதிபர், அவர்களையும் மேடையின் மீது அழைத்து அமர வைத்தார். அவருக்கு நினைவுப் பரிசாக வாஜித்பூரின் மண், அறுவடை செய்யப்பட்ட புதுநெய், வெள்ளி கேடயம் போன்றவற்றை கிராம மக்கள் வழங்கினார்கள்.
இந்த நிகழ்ச்சிக்கு பின்னர் திருப்பதிக்கு விமானம் மூலம் சென்ற ராஜ்கேஸ்வர், அதிகாலையில் திருப்பதி கோயிலில் சாமி தரிசனம் செய்தார். பின்னர் தமிழ்நாட்டிற்கு வருகைதரும் அவர், கோவையில் நடைபெறும் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்கின்றார்.












Click it and Unblock the Notifications